×

நன்னடத்தை அடிப்படையில் 5 சிறைவாசிகளை முன்கூட்டியே விடுவிக்க ஆட்சேபனை இல்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: நீண்ட காலம் சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக்கோரிய வழக்குகள் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. கடந்த முறை இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் 49 சிறைவாசிகளை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான பரித்துரை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அந்த பரிந்துரைகள் நிலுவையில் உள்ளன என்று தெரிவித்து உள்துறை செயலாளரின் கடிதத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

இந்த நிலையில் வழக்கு நேற்று மீண்டும் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர்மோகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிறைவாசிகள் ஷாகுல் ஹமீது, அஸ்லாம் உள்ளிட்ட 5 பேரின் சார்பில் ஜாமீனில் விடுவிக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் வாதிடும்போது, அரசின் பரிந்துரை மீது ஆளுநர் இன்னும் முடிவெடுக்கவில்லை. ஏற்கனவே உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் இதேபோன்ற மற்றொரு சிறைவாசி ஜாமீன் வழக்கு விசாரனையின் போது ஆளுநரிடம் கோப்புகள் நிலுவையில் உள்ளதால் ஜாமீன் வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் மனுதாரர்களை ஜாமீனில் விடுவிக்க அரசுக்கு ஆட்சேபனையும் இல்லை என்று குறிப்பிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர்கள் 5 பேருக்கும் மூன்று மாத இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

The post நன்னடத்தை அடிப்படையில் 5 சிறைவாசிகளை முன்கூட்டியே விடுவிக்க ஆட்சேபனை இல்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,High Court ,Chennai ,Court ,Dinakaran ,
× RELATED பாதாள சாக்கடைகளில் மனிதர்கள்...