திருக்கோவிலூர், அக்.6: திருக்கோவிலூர் அடுத்த காட்டுப் பையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் மணிகண்டன் (36), இவர் அருகே உள்ள வடமலையனூர் கிராமத்தில் ரேஷன் கடை சேல்ஸ்மேனாக பணியாற்றி வருகிறார். இவரது நண்பரான காட்டு செல்லூர் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுனன் (38) எரவளம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் சேல்ஸ் மேனாக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் நேற்று எரவளம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் ரேஷன் பொருட்களை இறக்கி வைத்துவிட்டு பின்னர் இருசக்கர வாகனத்தில் ஆவி கொளப்பாக்கம் புறவழிச் சாலையில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த வீரட்டகரத்தை சேர்ந்த கார்த்திகேயன்(28) என்பவர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே கார்த்திகேயன் குடும்பத்தினருக்கும் மணிகண்டன் குடும்பத்திற்கும் நிலம் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதனை மனதில் வைத்துக் கொண்டு கார்த்திகேயன் மணிகண்டனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கையில் வைத்திருந்த கத்தியால் மணிகண்டன், அர்ஜுனன் ஆகிய இருவரையும் தாக்கியுள்ளார். இதனால் தலையில் பலத்த காயம் அடைந்த அர்ஜுனன் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மணிகண்டன் திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
The post திருக்கோவிலூர் அருகே ரேஷன் கடை சேல்ஸ்மேனுக்கு கத்திக்குத்து appeared first on Dinakaran.