×

திருச்சியில் சுற்றுலாவுக்கு வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை எஸ்ஐ, 3 காவலர்கள் கைது: 4 பேரையும் சஸ்பெண்ட் செய்து எஸ்.பி அதிரடி

திருச்சி: 17வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எஸ்ஐ, 3 காவலர்கள் ஆகிய 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே முக்கொம்பு சுற்றுலாத்தலத்துக்கு திருச்சியை சேர்ந்த காதல் ஜோடி நேற்றுமுன்தினம் சென்றனர். மறைவான பகுதிக்கு காதல் ஜோடி சென்றுள்ளனர். அப்போது திருச்சி மாவட்டம் ஜீயபுரம் காவல்நிலையத்தில் பயிற்சி எஸ்ஐயாக பணியாற்றிய சசிக்குமார் (28), தேசிய நெடுஞ்சாலை ரோந்து (பேட்ரோல்) வாகனத்தில் பணியாற்றிய சங்கர் ராஜபாண்டி (32), நவல்பட்டு காவல்நிலைய காவலர் பிரசாத் (26), ஜீயபுரம் காவல்நிலைய காவலர் சித்தார்த் (30) ஆகிய 4 பேர் மப்டியில் அங்கு வந்ததாக கூறப்படுகிறது.

காதல் ஜோடி மறைவான இடத்தில் இருப்பதை நோட்டமிட்ட 4 பேரும், அவர்களை பின் தொடர்ந்துள்ளனர். இதில் காதலனை இருவர் பிடித்து வைத்துக்கொள்ள மற்ற இருவரும் 17 வயது சிறுமியை தங்கள் காருக்குள் தூக்கி சென்றனர். பின்னர் காருக்குள் வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து அவர்களது செல்போனில் படம் மற்றும் வீடியோ பதிவு செய்துள்ளனர். பின்னர் சிறுமியின் செல்போன் எண்ணை பெற்றுக்கொண்ட அவர்கள், ‘‘எப்போது அழைத்தாலும் வர வேண்டும், எப்போது போனில் அழைத்தாலும் பேச வேண்டும்.

இல்லையென்றால் காதலனை பிடித்து சிறையில் தள்ளிவிடுவோம்’’ எனக்கூறி மிரட்டி அனுப்பி வைத்தனர். இதில் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி, ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில், மாவட்ட எஸ்பி வருண்குமார் தலைமையிலான தனிப்படையினர் காதல்ஜோடியிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த சிறுமி கூறிய குற்றச்சாட்டு உண்மை என தெரியவந்தது.

இதையடுத்து எஸ்ஐ உட்பட 4 போலீசார் மீதும் போக்சோ, சிறுமியை மிரட்டியது, பாலியல் தொல்லை கொடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த சம்பவத்தில் கைதான எஸ்ஐ சசிக்குமார் ஜீயபுரத்தை சேர்ந்தவர், சங்கர்ராஜபாண்டியன் புதுக்கோட்டையை சேர்ந்தவர், பிரசாத் மற்றும் சித்தார்த் இருவரும் கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடியை சேர்ந்தவர்கள். இதை தொடர்ந்து துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை அடிப்படையில் 4 பேரையும் சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. வருண்குமார் உத்தரவிட்டுள்ளார்.

The post திருச்சியில் சுற்றுலாவுக்கு வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை எஸ்ஐ, 3 காவலர்கள் கைது: 4 பேரையும் சஸ்பெண்ட் செய்து எஸ்.பி அதிரடி appeared first on Dinakaran.

Tags : SI ,Trichy ,SP ,SB ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...