×

தாழம்பூர் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளை ஊரக துறை இயக்குனர் பொன்னையா ஆய்வு

திருப்போரூர், அக்.5: தாழம்பூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகளை, ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் பொன்னையா ஆய்வு செய்தார். திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய தாழம்பூர் ஊராட்சியில் ஏராளமான வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் இருந்து தூய்மை பணியாளர்கள் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளை தனித்தனியாக பெற்று திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பிரித்து உரம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், திருப்போரூர் ஒன்றியத்தில் ஆய்வுப்பணியில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் பொன்னையா, தாழம்பூர் ஊராட்சியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட நிர்வாகம் மற்றும் ஒன்றிய பொது நிதியில் இருந்து மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளை ஆய்வு செய்து, பின் திடக்கழிவு மேலாண்மை திட்ட கிடங்கிற்கு சென்றார். அங்கு குப்பைகளை தரம் பிரித்தல், அவற்றில் இருந்து உரம் தயாரித்தல் ஆகியவற்றை பார்வையிட்டு தூய்மை பணியாளர்களுக்கும், ஊராட்சி மன்ற ஊழியர்களுக்கும் பாராட்டு தெரிவித்தார். ஆய்வின்போது, திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் இதயவர்மன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூமகள்தேவி, சசிகலா, தாழம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் முனுசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெய்கணேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

The post தாழம்பூர் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளை ஊரக துறை இயக்குனர் பொன்னையா ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Ponnaiah ,Dalhampur panchayat ,Tiruporur ,Rural Development Department ,Dinakaran ,
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...