புதுடெல்லி: பகுஜன் சமாஜ் எம்பியை விமர்சித்தது தொடர்பாக பாஜ எம்பி ரமேஷ் பிதூரியிடம் மக்களவை உரிமை மீறல் குழு வருகிற 10ம் தேதி விசாரணை நடத்துகின்றது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மக்களவையில் சந்திரயான் -3 வெற்றி குறித்த விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது பேசிய பாஜ எம்பி ரமேஷ் பிதூரி, பகுஜன் சமாஜ் எம்பியான டேனிஷ் அலியை தகாத வார்த்தைகளால் விமர்சித்தார். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் பாஜ எம்பி மீது நடவடிக்கை எடுக்க கோரி அரசியல் கட்சிகள் சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதங்கள் எழுதப்பட்டது. சபாநாயகருக்கு வந்த கடிதங்கள், புகார்கள் உள்ளிட்ட அனைத்தையும் பாஜ உறுப்பினர் சுனில் குமார் தலைமையிலான உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனை தொடர்ந்து வருகின்ற 10ம் தேதி டேனிஷ் அலி விவகாரம் தொடர்பாக ரமேஷ் பிதூரியிடம் உரிமை மீறல் குழு விசாரணை நடத்துகின்றது.
The post பாஜ எம்பி ரமேஷ் சர்ச்சை பேச்சு விவகாரம் உரிமை மீறல் குழு 10ம் தேதி விசாரணை appeared first on Dinakaran.