×

முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 30 சவரன், ₹50 ஆயிரம் பணம் திருட்டு போலீசார் விசாரணை தண்டராம்பட்டில் மர்மநபர்கள் கைவரிசை

தண்டராம்பட்டு, அக்.4: தண்டராம்பட்டில் முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 30 சவரன், ₹50 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த வாணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட புதூர் பகுதியில் பறையம்பட்டு செல்லும் சாலையில் முன்னாள் ராணுவ வீரர் பூமிநாதன்(47) ஓய்வு பெற்று தற்போது வாழவச்சனூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி செல்வி(45). இவர்களுக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை பூமிநாதன் வேலைக்காக சென்று விட்டார். பின்னர் மனைவி செல்வியும் அதே பகுதியில் 100 நாள் வேலைக்கு சென்று விட்டு மதியம் நிலத்துக்கு சென்று விட்டார். மாலை பள்ளிக்கு சென்று இருந்த மகன், மகள்கள் ஆகியோர் வீட்டிற்கு வந்து கதவை திறக்கும்போது, கதவை திறக்கமுடியவில்லை. இதனால் பின்பக்க கதவை திறப்பதற்காக சென்றனர்.

அப்போது கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதைபார்த்த மகன், மகள்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வீட்டிற்குள் சென்றுபார்த்தபோது, அறை கதவுகள் உடைக்கப்பட்டு, பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து உடனடியாக செல்வி மற்றும் பூமிநாதனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து, வீட்டிற்குள் பார்த்தவுடன் பீரோவில் இருந்த 30 சவரன், ₹50 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து வாணாபுரம் போலீசில் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், எஸ்ஐ சரவணன், சவுந்தரராஜன், கைரேகை நிபுணர் கார்த்திக் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை செய்தனர். மேலும் தடயங்களை சேகரித்து சென்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

The post முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 30 சவரன், ₹50 ஆயிரம் பணம் திருட்டு போலீசார் விசாரணை தண்டராம்பட்டில் மர்மநபர்கள் கைவரிசை appeared first on Dinakaran.

Tags : Sawaran ,Thandarambat Thandarambatu ,Sawarans ,Thandarambat ,30 Sawarans ,Dinakaran ,
× RELATED கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில்...