×

ஊர், கடல் சுத்தத்தை வலியுறுத்தி ஒரு கையை இழந்த வாலிபர் 555 கி.மீ சைக்கிள் பயணம்

சென்னை: தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தமீம் அன்சாரி (36). பான் கார்டு பதிவு செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 2003ம் ஆண்டு சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்தபோது, விபத்தில் தனது வலது கையை இழந்தார். அதன்பிறகு, தற்போது வரை பல்வேறு தலைப்புகளை முன்வைத்து தனது இடது கை மூலம் சைக்கிள் ஓட்டி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், தனது தோழியின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘ஊர் சுத்தம்’ ‘கடல் சுத்தம்’ ஆகியவற்றை முன் வைத்து, சென்னை – தனுஷ்கோடி வரை 555 கிமீ தூரம் சைக்கிள் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார். இந்நிலையில், பெசன்ட் நகரில் தனது சைக்கிள் பயணத்தை தொடங்கிய தமீம் அன்சாரி நேற்று முன்தினம் மாமல்லபுரம் இசிஆர் சாலை வழியாக ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, இசிஆர் சாலை வழியாக சென்றவர்களை பார்த்து தனது ஒரே இடது கையால் வணக்கம் சொல்லி நமது ஊரையும், கடலையும் பாதுகாக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்திய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து, தமீம் அன்சாரி கூறுகையில், ‘நான் எப்போது சைக்கிள் பயணம் சென்றாலும் குடிநீர் பாட்டில், குளுக்கோஸ் எடுத்துச் செல்வேன். அப்போது, தண்ணீரை குடித்து விட்டு பாட்டிலை கண்ட இடங்களில் வீசி விடுவேன். இதனை, பார்த்த எனது சகோதரி சுகாதாரத்தை பேணிக்காக்க தவறிய நீ எதற்கு சைக்கிளில் சென்று விழிப்புணர்வு செய்கிறாய் என கடுமையாக கண்டித்து பல முறை எச்சரித்துள்ளார். அதன் பிறகு, எப்போது சைக்கிள் பயணம் சென்றாலும் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.

கடந்த, 2003ம் ஆண்டு ஒரு விபத்தில் எனது வலது கையை இழந்தேன். இதுவரை, 31 ஆயிரம் கிமீ தூரம் சைக்கிளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளேன். கடந்தாண்டு, குழந்தைகள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என ஊட்டியில் இருந்து சென்னை வரை விழிப்புணர்வு செய்தேன். அப்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் வரவேற்று பாராட்டினார். தற்போது, எனது தோழியின் பிறந்த நாளை முன்னிட்டு, ‘ஊர் சுத்தம், ‘கடல் சுத்தம்’ ஆகியவற்றை முன் வைத்து சென்னை – தனுஷ்கோடி வரை சைக்கிள் பயணத்தை தொடங்கி உள்ளேன். இதனை, 3 நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளேன்’ என்றார்.

The post ஊர், கடல் சுத்தத்தை வலியுறுத்தி ஒரு கையை இழந்த வாலிபர் 555 கி.மீ சைக்கிள் பயணம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamim Ansari ,Attur village ,Thoothukudi district ,PAN ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...