×

கொரோனா குணமானாலும் அதன் பாதிப்புகள் தொடரும்’: ஆக்ஸ்போர்டு மருத்துவ பேராசிரியரின் ‘பகீர்’ ஆய்வறிக்கை

ஆக்ஸ்போர்டு: உலகையே புரட்டிப்போட்ட கொரோனா நோய் தாக்கி, மருத்துவ சிகிச்சை பெற்று குணமடைந்தாலும், அந்த வைரஸ் உடலிலிருந்து முற்றிலும் அகலாமல் பல்வேறு உள்ளுறுப்புகளை பாதிப்பதாக சமீபத்திய மருத்துவ ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டிப்படைத்த கொரோனா (கோவிட்-19) தொற்று நோய் மருத்துவ உலகை இன்றளவும் பதற்றத்திலேயே வைத்துள்ளது. ‘சார்ஸ் கோவிட்-2’ என்ற கொடிய வைரஸ் மூலம் பரவிய கொரோனாவால் தாக்கப்பட்ட பலரும் நுரையீரல் செயலிழந்து இறந்தாலும், அவர்கள் உடலின் பல்வேறு உள்ளுறுப்புகளும் பாதிக்கப்பட்டிருந்தன. அதனால் கொரோனா தாக்கியவர்கள் சிகிச்சை பெற்று குணமடைந்தாலும், பிற்காலத்தில் அவர்களது உள்ளுறுப்புகள் செயல்பாட்டில் சிக்கல் ஏற்படக்கூடும் என்று சர்வதேச மருத்துவ நிபுணர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

அந்த வகையில், இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக இதயநாள சிகிச்சை துறை இணைப்பேராசிரியர் பெட்டி ராமன் என்பவர் தனது ‘சி-மோர்’ என்ற ஆய்வு திட்டத்தின்கீழ் பரிசோதனை மேற்கொண்டார். அதில் கொரோனா தாக்கிய 259 பேர்களையும், கொரோனா தாக்காத 52 பேர்களையும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் படமெடுத்து ஆய்வு செய்ததில் கொரோனா தாக்கியவர்களின் உள்ளுறுப்புகளில் மாறுபாடான செயல்பாட்டை அறிந்தார். அவ்வகையில் கொரோனா தாக்கியவர்கள் மற்றவர்களை விட மும்மடங்கு மூளை இயக்கத்திலும், இரு மடங்கு சிறுநீரக செயல்பாட்டிலும் பாதிக்கப்படுவது தெரிய வந்தது. அவர்களுக்கு ஏற்கெனவே உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பாதிப்புகள் இருந்தால் அதற்கேற்ப கூடுதல் பாதிப்புகள் ஏற்படுவதும் தெரிய வந்தது.

தனது ஆய்வு முடிவுகளின்படி மருத்துவ பேராசிரியர் பெட்டி ராமன், மருத்துவர்கள் அவர்களிடம் சிகிச்சை பெற வந்தவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் என்றால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அத்துடன், அவர்களது நுரையீரல், மூளை, சிறுநீரகம், ரத்த குழாய்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளை கவனித்து தக்க சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்களுக்கு பரிந்துரைத்துள்ளார்.

The post கொரோனா குணமானாலும் அதன் பாதிப்புகள் தொடரும்’: ஆக்ஸ்போர்டு மருத்துவ பேராசிரியரின் ‘பகீர்’ ஆய்வறிக்கை appeared first on Dinakaran.

Tags : Oxford ,Bakir ,Dinakaraan ,
× RELATED உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முன்பும்,...