×

மாரத்தானுக்கு இணையான நெடுந்தூர ஓட்ட போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப்போட்டிக்கு நாளை மாலைக்குள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவள்ளூர் மாவட்ட பிரிவின் சார்பாக பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 7ம் தேதி காலை 6 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனியாக மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப் போட்டிகள் நடைபெற உள்ளது. அதன்படி 17 வயது முதல் 25 வயதிற்குட்டபட்ட ஆண்களுக்கு 8 கி.மீ. தூரமும், பெண்களுக்கு 5 கி.மீ. தூரமும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ. தூரமும், பெண்களுக்கு 5 கி.மீ. தூரமும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் முதல் இடத்தை பிடிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.5 ஆயிரமும், 2ம் இடத்தை பிடிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.3 ஆயிரமும், 3ம் இடத்தை பிடிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.2 ஆயிரமும், 4ம் இடம் முதல் 10ம் இடம் வரை பிடிக்கும் ஒவ்வொரு வீரர், வீராங்கனைகளுக்கும் ரூ.1,000 வீதம் என மொத்தப் பரிசுத் தொகை ரூ.68 ஆயிரமும், சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.

இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ மாணவியர்கள், பொது மக்கள் அனைவரும் நாளை (அக். 5) மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வழங்கப்படும் மருத்துவ தகுதி சான்றிதழ்களை பெற்று பூர்த்தி செய்து, அத்துடன் தங்கள் பெயரில் உள்ள வங்கி கணக்கின் முதல் பக்கத்தின் நகல், வயது சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றை சமர்ப்பித்து பெயரை பதிவு செய்திட வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் க.பிரேம்குமாரை 74017 03482 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

The post மாரத்தானுக்கு இணையான நெடுந்தூர ஓட்ட போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Alby John Varghese ,
× RELATED திருவள்ளூர் அரசு மருத்துவ...