×

மாந்திரீக பூஜை செய்வதாக கூறி வாலிபரை நிர்வாணப்படுத்தி அடித்து கொன்ற போலி சாமியார்: தெலங்கானாவில் பரபரப்பு

திருமலை: உடல்நலம் பாதித்த வாலிபருக்கு மாந்திரீக பூஜை செய்வதாக கூறி நிர்வாணப்படுத்தி அடித்து கொடுமைப்படுத்தியதால் அவர் பரிதாபமாக இறந்தார். சடலத்தை எரிக்க முயன்ற போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டம் சென்னூர் நகரை சேர்ந்தவர் தாசரிமது(35). இவர் பல மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் உடல்நிலை சரியாகவில்லை.

இதுகுறித்து சாமியார் ஒருவரை சந்தித்த தாசரிமதுவின் குடும்பத்தினர், அவரது உடல்நிலை குறித்து கூறினர். அதற்கு அந்த சாமியார், தீயசக்தி சேர்ந்துள்ளதால் உடல்நிலை பாதித்துள்ளது. அந்த தீயசக்தியை உடலில் இருந்து வெளியேற்ற மாந்திரீக பூஜை செய்ய வேண்டும் எனக்கூறினார். இதனை நம்பிய தாசரிமது குடும்பத்தினர் பூஜை செய்ய ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து நேற்று கோதாவரி ஆற்றின் அருகே தாசரி மதுவை அழைத்துச்சென்று மாந்திரீக பூஜைக்கான ஏற்பாடு செய்தனர். அங்கு தாசரிமதுவை நிர்வாணப்படுத்தி உட்கார வைத்த போலி சாமியார், மந்திரம் சொல்வது போல் நடித்து அவரை சரமாரியாக அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் வலி தாங்காமல் அலறி துடித்த தாசரிமது, திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கேட்டபோது, சாமியார் பொய் சொல்லி சமாளித்துள்ளார். இதையடுத்து குடும்பத்தினரை சமாதானம் செய்த போலி சாமியார், உடனடியாக சடலத்தை யாருக்கும் தெரியாமல் எரிக்க ஏற்பாடு செய்தார்.

இதற்கிடையில் சாமியார் பூஜை செய்தபோது அங்கிருந்த தாசரிமதுவின் உறவினர், ரகசியமாக செல்போனில் வீடியோ எடுத்தார். ஆனால் தாசரிமது இறந்தவுடன் அதிர்ச்சியடைந்த அவர், வீடியோவை போலீசாருக்கு அனுப்பினார். அதனை கண்ட போலீசார் உடனே அங்கு வந்து தாசரிமதுவின் சடலத்தை மீட்டனர். சடலத்தை பிரேத பரிசோதனைக்காக சென்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சாமியார் மற்றும் அவருடன் இருந்தவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

உடல்நிலை பாதித்தவருக்கு மாந்திரீக பூஜை செய்வதாக கூறி நிர்வாணப்படுத்தி கொடுமை செய்ததால் இறந்த சம்பவம் குறித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

The post மாந்திரீக பூஜை செய்வதாக கூறி வாலிபரை நிர்வாணப்படுத்தி அடித்து கொன்ற போலி சாமியார்: தெலங்கானாவில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Samiyar ,Waliber ,Telangana ,Tirumalai ,
× RELATED மாடு குறுக்கே வந்ததால் 30 பயணிகளுடன் சென்ற பஸ் வீட்டின் மீது மோதி விபத்து