×

காந்தி பிறந்த நாள், காமராஜர் நினைவு நாளில் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை


சென்னை: காந்தியடிகள் பிறந்தநாளை முன்னிட்டும், காமராஜர் நினைவு நாளை முன்னிட்டும் அவர்களின் சிலைகளுக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காந்தியடிகளின் 155வது பிறந்த தினம் நேற்று கொண்டாட்டப்பட்டது. இதை முன்னிட்டு சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகம் வளாகத்தில் அமைந்துள்ள காந்தியடிகளின் திருவுருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தூவி மரியாதை செலுத்தினர். தமிழக காங்கிரஸ் சார்பில் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பொது செயலாளர் தணிகாசலம், முன்னாள் மாவட்ட தலைவர் அரும்பாக்கம் வீரபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் கராத்தே ரவி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் தமாகா சார்பில் அதன் தலைவர் ஜி.கே.வாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், பிஜூசாக்கோ, முனவர் பாட்சா, சிவபால், நிர்வாகிகள் சைதை நாகராஜ், சென்னை நந்து உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதே போல் பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, துணை தலைவர் கருநாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

பாமக வடக்கு மண்டல இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, இளைஞர் சங்க செயலாளர் வே.வடிவேல், ஆம் ஆத்மி கட்சி தலைவர் வசீகரன் உள்பட ஏராளமானோர் காந்தி உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர். இதே போல பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காமராஜர் நினைவு நாள்: பெருந்தலைவர் காமராஜரின் 49வது நினைவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அப்போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் மோகன் ஆகியோர் உடன் இருந்தனர். சமத்துவ மக்கள் கழகம் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு காமராஜர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தேமுதிக சார்பில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது முன்னாள் எம்எல்ஏ பார்த்தசாரதி, நடிகர் ராஜேந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதே போல் தமிழ்நாடு இளைஞர் சங்க மாநில தலைவர் எம்.எம்.ஆர்.மதன் இளைஞர்களுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதே போல காங்கிரஸ், பாஜக, பாமக, விசிக, தமாகா, அமமுக சார்பிலும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் காமராஜர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

The post காந்தி பிறந்த நாள், காமராஜர் நினைவு நாளில் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை appeared first on Dinakaran.

Tags : Gandhi ,Kamaraj ,day ,Chennai ,Gandhiji ,Kamaraj Memorial Day ,
× RELATED ஸ்ரீரங்கம் காந்தி சாலையில் திடீர்...