×

காசிமேட்டில் மீன் வாங்க அலைமோதிய கூட்டம்: ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.700க்கு விற்பனை

சென்னை: மீன்களை வாங்க காசிமேட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது. எனினும் ஒருகிலோ வஞ்சிரம் ரூ.700க்கு மட்டுமே விற்பனையானது. இது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை
ஏற்படுத்தியது. புரட்டாசி மாதத்தில் சென்னை மக்கள் மீன் போன்ற அசைவ உணவை தவிர்ப்பது வழக்கம். இதனால் பெரும்பாலும் புரட்டாசி மாதத்தில் மீன்களின் விலை மிகக் குறைவாகவே இருக்கும். கடந்த இரண்டு வாரமாக மீன்களின் விலை மிக மோசமான நிலையில் இருந்தது. இதனால் மீனவர்கள், விசைப்படகு உரிமையாளர்கள் பெருத்த நஷ்டத்தை சந்தித்தனர்.

தற்போது சென்னைக்கு கர்நாடக மாநிலம், மங்களூரில் இருந்து ஏராளமான மீன்கள் தினசரி வந்துகொண்டிருந்த நிலையில், காவிரி போராட்டம் காரணமாக மீன்கள் நேற்று வரவில்லை. மும்பை மற்றும் ஆந்திர மாநிலங்களிலிருந்து நேற்று மீன்கள் வந்தன. எனவே, மீன்களின் விலை குறைவாக இருக்கும் என மொத்த வியாபாரிகள் வந்ததால், விசைப்படகு உரிமையாளர்களுக்கு சராசரி விலையில் மீன்கள் விற்கப்பட்டன.

இது குறித்து மீனவர்கள் கூறுகையில், ‘‘கடந்த 2 வாரங்களை ஒப்பிடுகையில் நேற்று எங்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படவில்லை. பெரிய ரக மீன்கள் ஏராளமாக கிடைத்ததால் ஓரளவு பாதிப்பில்லாமல், இந்த ஞாயிற்றுக்கிழமை ஏலம் முடிந்தது’’ என்றனர். விலை தொடர்ந்து குறைவாக இருக்கும் என்ற செய்தி பரவியதால் நேற்று ஏராளமானோர் சந்தைக்கு வந்திருந்தனர். நேற்று ஒருகிலோ வஞ்சிரம் ரூ.700க்கும், வவ்வால் மற்றும் இறால் ரூ.450க்கும், நண்டு ரூ.400க்கும், சங்கரா ரூ.250க்கும் விற்பனை செய்யப்பட்டது.

The post காசிமேட்டில் மீன் வாங்க அலைமோதிய கூட்டம்: ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.700க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Kasimat ,Panjiram ,CHENNAI ,Dinakaran ,
× RELATED தடைகாலம் என்பதால் வரத்து குறைந்தது...