×

நடுவானில் இயந்திர கோளாறு குவைத் செல்லும் ஜசீரா விமானம் 5 மணி நேரம் தாமதம்

சென்னை: நடுவானில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக, சென்னையில் இருந்து குவைத் செல்லும் ஜசீரா தனியார் பயணிகள் விமானம், 5 மணி நேரம் தாமதமாக சென்னை வந்தது. ஜசீரா ஏர்லைன்ஸ் தனியார் பயணிகள் விமானம் குவைத்தில் இருந்து சென்னைக்கு அதிகாலை 1:20 மணிக்கு வந்துவிட்டு, மீண்டும் அதிகாலை 2:05 மணிக்கு சென்னையில் இருந்து குவைத் புறப்பட்டு செல்லும். இந்நிலையில் நேற்று அதிகாலை இந்த விமானத்தில் குவைத் செல்ல 172 பயணிகள் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு முன்னதாகவே சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து, பாதுகாப்பு சோதனைகள் உட்பட அனைத்தையும் முடித்துவிட்டு விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர்.

ஆனால் குவைத்தில் இருந்து அதிகாலை 1:20 மணிக்கு வர வேண்டிய அந்த விமானம் சென்னைக்கு வரவில்லை. இந்த விமானம் 168 பயணிகளுடன் குவைத்தில் இருந்து வந்து கொண்டிருந்தபோது, நடுவானில் இயந்திர கோளாறு ஏற்பட்டு, விமானம் மீண்டும் குவைத்துக்கே திரும்பி சென்று விட்டது என்று தெரிய வந்தது. இதனால் விமானம் தாமதமாக வந்து குவைத்துக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து குவைத் செல்லும் 172 பயணிகள் சென்னையில் விமான நிலையத்தில் காத்திருந்தனர். இந்நிலையில் ஜசீரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், குவைத்தில் இருந்து நேற்று காலை 6 மணிக்கு சென்னை வந்தது. அதன் பின்பு சென்னை விமான நிலையத்தில் 5 மணி நேரமாக தவித்துக் கொண்டிருந்த 172 பயணிகளும் மீண்டும் காலை 7 மணிக்கு குவைத்துக்கு புறப்பட்டு சென்றனர்.

The post நடுவானில் இயந்திர கோளாறு குவைத் செல்லும் ஜசீரா விமானம் 5 மணி நேரம் தாமதம் appeared first on Dinakaran.

Tags : Kuwait ,Jazeera ,Chennai ,
× RELATED சென்னையில் இருந்து துபாய், குவைத்,...