மகளிர் 49 கிலோ எடை பிரிவு பளுதூக்குதலில் களமிறங்கிய இந்திய நட்சத்திரம் மீராபாய் சானு, துரதிர்ஷ்டவசமாக தடுமாறி விழுந்ததால் 4வது இடம் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை பறிகொடுத்தார். ஸ்நேட்ச் முறையில் மோசமாக செயல்பட்டதால் 6வது இடத்துக்கு தள்ளப்பட்ட மிராபாய், அடுத்து கிளீன் & ஜெர்க் முறையில் கடும் நெருக்கடியுடன் 117 கிலோ எடையை தூக்கும் முயற்சியில் இறங்கினார். இதில் வெற்றி பெற்றால் வெண்கலப் பதக்கம் கிடைப்பது உறுதி என்ற நிலையில் நிலை தடுமாறி விழுந்ததால் சானுவின் பதக்க கனவு கலைந்தது. இந்த போட்டியில் அவர் மொத்தம் 191 கிலோ எடை தூக்கி (83 கிலோ + 108 கிலோ) 4வது இடம் பிடித்தார்.
* கவுகாத்தியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் நேற்று மோதுவதாக இருந்த ஐசிசி உலக கோப்பை பயிற்சி ஆட்டம், கனமழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் ரத்தானது. இந்தியா தனது 2வது பயிற்சி ஆட்டத்தில் நாளை மறுநாள் நெதர்லாந்து அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி, திருவனந்தபுரம் கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும்.
* பேட்மின்டன் பைனலில் இந்தியா
ஆண்கள் பேட்மின்டன் குழு போட்டியின் அரையிறுதியில் தென் கொரியாவுடன் நேற்று மோதிய இந்தியா 3-2 என்ற கணக்கில் போராடி வென்று பைனலுக்கு முன்னேறியது. இரட்டையர் ஆட்டங்களில் தென் கொரியா வெற்றியை வசப்படுத்திய நிலையில், ஒற்றையர் ஆட்டங்களில் எச்.எஸ்.பிரணாய், லக்ஷியா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த் அபாரமாக விளையாடி இந்திய அணியை பைனலுக்கு தகுதி பெற வைத்தனர். இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா பலம் வாய்ந்த சீனாவை சந்திக்கிறது.
The post ஆசிய விளையாட்டு போட்டி 2023: 4வது இடத்துடன் கலைந்த கனவு appeared first on Dinakaran.