சென்னை: குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் திரையரங்கம் அருகில், பல்லாவரம் – துரைப்பாக்கம் ரேடியல் சாலை மேம்பாலத்துக்கு அருகில் ஆண்டுதோறும் மழைக்காலத்தில் மழைநீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதுகுறித்து பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி சட்டமன்றத்தில் பேசி கோரிக்கை வைத்து மேற்கண்ட இடங்களில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் மழைநீர் கால்வாய், சிறுபாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ள ரூ.4.25 கோடியில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. தொடர்ந்து, ரயில்வே தண்டவாளத்துக்கு அடியில் கால்வாய் அமைக்க ரூ.2 கோடி ரயில்வேக்கு நெடுஞ்சாலைத் துறை வழங்கியுள்ளது. தற்போது, தொடர் மழை காரணமாக மேற்கண்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி ஆகியோர் நேற்று மாலை மேற்கண்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.அப்போது, நெடுஞ்சாலைத்துறை சார்பில், கால்வாய் பணிகளை 3 மாதத்துக்குள் முடிக்க வேண்டும், அதை தொடர்ந்து ரயில்வே தண்டவாளத்தில் கால்வாய் அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்கி முடித்து இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு அமுதா ஐஏஎஸ் உத்தரவிட்டார்.அடையாறு கால்வாயை ஆய்வுசெங்கல்பட்டு மாவட்டத்தில் பருவமழை மீட்பு பணிகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள அமுதா ஐஏஎஸ், நேற்று கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர் பகுதியில் துவங்கும் அடையாறு கால்வாயை, அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு, சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து முடிச்சூர், வரதராஜபுரம், அமுதம் நகர் மற்றும் அடையாறு கால்வாய் பகுதிகளை ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அடையாறு கால்வாய் ஆதனூரில் தொடங்கி பள்ளிக்கரணை வரை சீரமைக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் மழை வந்தால் என்னெல்லாம் பாதிப்புகள் ஏற்படும், எங்கெல்லாம் பாதிப்புகள் ஏற்படும் என கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு பொதுப்பணித்துறை மூலமாக கால்வாய் அகலப்படுத்துவது மற்றும் முன் பருவமழை வேலைகளை நன்றாக செய்துள்ளதால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து எவ்வளவு தண்ணீர் திறந்து விடப்பட்டாலும் இந்த பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. தமிழக முதலமைச்சர் சிறப்பான பணிகளை செய்து வருகிறார். செங்கல்பட்டு பகுதியில் முழுமையாக ஆய்வு செய்து உடனடியாக ஆய்வறிக்கை தரவும், யாருக்கும் வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடாது என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார். …
The post மழைநீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமுதா ஐஏஎஸ் உத்தரவு appeared first on Dinakaran.