×

அதிவேகமாக வந்த பஸ் கார் மீது மோதி 3 பேர் பலி

திருமயம்: புதுகை அருகே அதிவேகமாக வந்த தனியார் பேருந்து, கார் மீது மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். சிறுவன் உட்பட 12 பேர் படுகாயமடைந்தனர். மதுரையில் இருந்து நேற்று காலை 10 மணியளவில் புதுக்கோட்டைக்கு ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இதில் 40பயணிகள் இருந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பேரையூர் நாகநாதர் கோயிலுக்கு சென்று விட்டு சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடி கிராமத்திற்கு ஒரு கார் சென்று கொண்டிருந்தது. காரை சிவகங்கை மாவட்டம் முத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் (25) ஓட்டி வந்தார். புதுக்கோட்டை நமணசமுத்திரம் காவல்நிலையம் அருகே திருச்சி- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் காலை 11.30 மணியளவில் அதிவேகமாக பஸ் சென்று கொண்டிருந்தது.

அப்போது முன்னால் சென்ற மற்றொரு பஸ் மற்றும் லாரியை முந்தி செல்ல முயன்றபோது, எதிரே வந்த காரும் முந்தி செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து பஸ்சை நோக்கி வந்தது. இதில் கார் மீது பஸ் பயங்கரமாக மோதி நீண்ட தூரம் இழுத்து சென்றது. பஸ்சுக்கு அடியில் சிக்கியதால் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் சென்ற சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கீழப்பூங்குடி கிராமத்தை சேர்ந்த ஆதிமுகிலன் (25), கார் டிரைவர் சந்தோஷ்(25, அஞ்சலை (45) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர். தனியார் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் விபத்து நடந்த காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

The post அதிவேகமாக வந்த பஸ் கார் மீது மோதி 3 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Thirumayam ,Pudugai ,
× RELATED டோல்பூத் கட்டணத்தை தவிர்க்க...