
புவனேஸ்வர்: ஒடிசா மாநில சட்டப்பேரவை தலைவரை நோக்கி பருப்பை வீசிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பாஜக எம்எல்ஏக்கள் இருவர், கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகின்றனர். சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஆளும் பிஜு ஜனதா தள எம்எல்ஏ அருண் குமார் பேசுகையில், ‘எதிர்க்கட்சியான பாஜக உறுப்பினர்கள் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் போல் அவைக்கு வராமல், நல்ல மனநிலையுடன் வர வேண்டும்’ என்று பேசினார்.
அருண் குமாாின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த பாஜக எம்எல்ஏக்கள், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், அவரது பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்கக் கோரியும் அவையின் மையப் பகுதிக்கு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது பேரவைத் தலைவரான சபாநாயகரை நோக்கி சிலர் பருப்பு வீசினர். அவரது மேஜை மீது பருப்பு விழுந்ததால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பருப்பை வீசியதாக பாஜக தலைமை கொறடா மோகன் மஜி, எம்எல்ஏ முகேஷ் மகாலிங் ஆகியோரை வரும் அக்டோபர் 4ம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் முடியும் வரையில் இடைநீக்கம் செய்வதாக சட்டப்பேரவைத் தலைவர் பிரமீளா மாலிக் அறிவித்தார்.
The post ஒடிசா சட்டப் பேரவையில் சபாநாயகர் மீது பருப்பு வீச்சு: 2 பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.