×

நீர்மட்டம் 40 அடியாக கிடுகிடு உயர்வு கோமுகி அணை விரைவில் திறக்கப்படும்

*பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

சின்னசேலம் : கோமுகி அணையின் நீர்மட்டம் 40 அடியாக உயர்ந்துள்ளதால் வழக்கம்போல அக்டோபர் முதல் வாரத்தில் பாசனத்திற்கு அணையை திறக்க வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கல்வராயன்மலையடிவாரத்தில் உள்ள கோமுகி அணை சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் 46 அடிவரை நீரை தேக்கி வைக்கும் வகையில் காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது.

இதில் ஆற்றுப் பாசனத்தின் மூலம் 5860 ஏக்கர் விவசாய நிலமும், பிரதான கால்வாய் பாசனத்தின் மூலம் 5000 ஏக்கர் விவசாய நிலமும் பாசன வசதி பெறுகிறது. அதாவது கோமுகி அணையின் மூலம் கச்சிராயபாளையம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதிகளை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாய மக்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும் கோமுகி ஆற்றின் குறுக்கே சோமண்டார்குடி, கச்சிராயபாளையம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 11 இடங்களில் தடுப்பு அணைகள் கட்டப்பட்டு, அதன்மூலம் ஏரிகளில் நீரை நிரப்பியும் விவசாயம் செய்கின்றனர். கோமுகி ஆற்றின் கரையோர கிராமங்களுக்கும் பற்றாக்குறையின்றி குடிநீர் வசதி கிடைக்கிறது. கடந்த 30 ஆண்டுகளுக்குமுன் பருவமழை தொடர்ந்து பெய்து வந்ததால் கோமுகி அணை பாசனத்தால் விவசாயிகள் சம்பா பருவத்துடன் சேர்த்து 3 போகமும் நெல் அறுவடை செய்தனர்.

இந்த நிலையில் கல்வராயன்மலையில் போதிய மழை இல்லாததாலும், கைகான் வளவு ஆற்றில் நீர்வரத்து தடைபட்டதாலும் அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது. இதனால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அணையின் நீர்மட்டம் 30 அடியாக இருந்தது. இந்த நிலையில் கல்வராயன்மலையில் கடந்த சில தினங்களாக மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இதனால் கோமுகி அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. அதாவது 32, 34, 35, 39.5 அடி என உயர்ந்து வந்தது.

மேலும் நேற்று இரவு மழை பெய்ததால் கோமுகி அணைக்கு மலையில் உள்ள பொட்டியம், மாயம்பாடி, மல்லியம்பாடி, கல்பொடை உள்ளிட்ட ஆறுகளில் இருந்து நீர்வரத்து இருந்தது. இதனால் கோமுகி அணையின் நீர்மட்டம் 40 அடியாக உயர்ந்துள்ளது. சம்பா பருவ சாகுபடிக்கு விவசாயிகளின் நலன்கருதி ஒவ்வொரு வருடமும் அக்டோபர் முதல் வாரத்தில் கோமுகி அணை நீரை பாசனத்திற்கு திறந்து விடுவது வழக்கம். அப்போதுதான் விவசாயிகள் வயலை உழுது நாற்று விடுவார்கள்.

அணை திறக்கும்போது குறைந்தது 44 அடி நீர்மட்டம் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை துவங்காத நிலையில் 40 அடி மட்டுமே உள்ளது. இருப்பினும் கோமுகி அணை பாசனத்திற்கு திட்டமிட்டபடி அக்டோபர் முதல் வாரத்தில் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் கோமுகி அணை பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post நீர்மட்டம் 40 அடியாக கிடுகிடு உயர்வு கோமுகி அணை விரைவில் திறக்கப்படும் appeared first on Dinakaran.

Tags : Komuki Dam ,Public Works Department ,Chinnasalem ,
× RELATED ஊராட்சி தலைவரின் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார்