×

புதுச்சேரி காவல்நிலையத்தில் பெண் தீக்குளித்து சாவு: எஸ்.ஐ, ஏஎஸ்ஐ இடமாற்றம், குடும்பத்துக்கு 20 லட்சம் இழப்பீடு

புதுச்சேரி: காவல்நிலையத்தில் தீக்குளித்த பெண் நேற்று உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்குவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி பிள்ளைச்சாவடி மீனவர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (38), இவரது மனைவி கலைச்செல்வி (35). இவர்களிடம் அதேபகுதியை சேர்ந்த ஏழுமலை ரூ.5 லட்சம் கடன் வாங்கினார். கடன் தொகையை திருப்பி கேட்டபோது, ஏழுமலை காலம் கடத்தினார். நேற்று முன்தினம் சந்திரன் தனது மனைவி கலைச்செல்வியுடன் ஏழுமலை வீட்டுக்கு சென்று கடன் தொகையை திருப்பி கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து தன்னை மிரட்டுவதாக ஏழுமலை காலாப்பட்டு போலீசில் முறையிடவே, தம்பதியை காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து எச்சரித்தனர். ஆத்திரமடைந்த கலைச்செல்வி, பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார். இதுதொடர்பாக எஸ்ஐ இளங்கோ, ஏஎஸ்ஐ நாகராஜ் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.

கலைச்செல்வியின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் நேற்று காலாப்பட்டு தொகுதி எம்எல்ஏ கல்யாணசுந்தரம் தலைமையில் ஊர் பஞ்சாயத்தாரர்கள் மற்றும் பொதுமக்கள் சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து, கலைச்செல்வி குடும்பத்துக்கு ஒரு கோடி நிதி, அரசு வேலை வழங்க வேண்டும் மற்றும் போலீசார் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முறையிட்டனர். இதையடுத்து, ரூ.20 லட்சம் நிவாரணம் மற்றும் போலீசார் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். முதல்வர் உறுதியளித்ததை தொடர்ந்து, பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு சடலத்தை பெற்று சென்றனர்.

The post புதுச்சேரி காவல்நிலையத்தில் பெண் தீக்குளித்து சாவு: எஸ்.ஐ, ஏஎஸ்ஐ இடமாற்றம், குடும்பத்துக்கு 20 லட்சம் இழப்பீடு appeared first on Dinakaran.

Tags : Puducherry police station ,SI ,Puducherry ,Chief Minister ,Rangasamy ,police station ,ASI ,
× RELATED டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சிகள் பதுக்கிய 2 பேர் கைது