×

பாஜகவின் நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின் எங்களின் நிலைப்பாட்டை தெரிவிப்போம்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை: பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியுள்ள நிலையில், தனிக்கட்சி தொடங்கி பாஜக உடன் கூட்டணி அமைப்பதா அல்லது தினகரனின் அமமுக உடன் சேர்ந்து பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திப்பதா என ஓ.பி.எஸ் தரப்பில் ஆலோசிக்கப்பட்டது. ஓபிஎஸ் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், வைத்திலிங்கம், பண்ருட்டி ராமச்சந்திரன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “கடந்த ஒரு மாதமாக பாஜகவில் இருந்து டெல்லி தலைவர்கள் எங்களுடன் பேசி வருகிறார்கள். “பாஜகவில் இருந்து தினந்தோறும் எங்களிடம் தொடர்பு கொண்டுதான் இருக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தல் என்பதால் தேசிய அளவில் எங்கள் அணி இடம்பெறும். மூன்றாவது முறையும் ஆளும் தகுதியை பாஜக பெற்றிருக்கிறது.

பாஜகவின் நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின் எங்களின் நிலைப்பாட்டை தெரிவிப்போம். பாஜகவுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். பாஜக மாநில தலைவரை மாற்றச் சொல்ல எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு என்ன அருகதை இருக்கிறது? எடப்பாடி பழனிசாமியை அதிமுகவில் இருந்து மாற்றச் சொல்லி பாஜக கேட்டால் ஏற்றுக் கொள்வார்களா? ஒருங்கிணைந்த அதிமுகதான் வெல்லும் என நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறோம். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றே தொண்டர்களும் விரும்புகிறார்கள், மக்களும் நினைக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடவும் தயாராக உள்ளோம். தேர்தல் வரும் போது கூட்டணி குறித்து அறிவிப்போம். பாஜகவின் மத்திய தலைமை என்னோடு பேசிக்கொண்டு உள்ளது. படிப்படியாக நல்ல நிகழ்வுகள் நடைபெறும். மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.” என்றார்.

The post பாஜகவின் நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின் எங்களின் நிலைப்பாட்டை தெரிவிப்போம்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Bajaga ,O.K. Panneerselvam ,Chennai ,Bajaka ,Dinakaran ,
× RELATED காந்தி நகரில் அமித் ஷா-வை எதிர்த்து...