×

‘என் பெயரில் வீடு இல்லை’ லட்சக்கணக்கான பெண்களை வீட்டு உரிமையாளராக்கி உள்ளேன்: குஜராத்தில் மோடி பேச்சு

போடேலி: லட்சக்கணக்கான பெண்களை எனது அரசு வீட்டு உரிமையாளராக்கி உள்ளது. ஆனால், எனது பெயரில் வீடு இல்லை என்று குஜராத்தில் நேற்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். இரண்டு நாள் சுற்றுப்பயணமாக குஜராத் சென்ற மோடி, நேற்று குஜராத் பழங்குடியின மக்கள் வசிக்கும் சோட்டாடேபூர் மாவட்டம் போடேலி நகரில் நடந்த நிகழ்ச்சியில் ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:
ஏழை மக்களின் பிரச்னைகளை தீர்க்க முயற்சித்து வருகிறேன். நாடு முழுவதும் உள்ள ஏழைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் என் அரசு ஏராளமான வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது. லட்சக்கணக்கான பெண்கள் வீட்டு உரிமையாளர்களாக மாறியுள்ளனர். குஜராத் கல்வித்துறை செயல்படுத்தும் வித்யா சமிக்‌ஷா கேந்திரா மையம் பற்றி உலக வங்கி தலைவர் அஜய் பங்கா ஈடுபாடு காட்டியதுடன், நாடு முழுவதும் அந்த மையங்களை அமைக்க உலக வங்கி உதவும் என்று தெரிவித்திருக்கிறார்.

30 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த புதிய கல்வி கொள்கையை எங்கள் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ‘துடிப்பான குஜராத்’ திட்டம் மூலம் குஜராத் வளர்ச்சிக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் விதை விதைத்தோம். குஜராத்தை பின்பற்றி பிற மாநிலங்களும் முதலீட்டு மாநாடுகள் நடத்துகின்றன. இந்தியா உலக பொருளாதார சக்தியாக வேண்டும் என்பதே எங்கள் லட்சியம். சில ஆண்டுகளில் உலக பொருளாதாரத்தில் மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறுவதை காண்பீர்கள். இவ்வாறு மோடி பேசினார்.

The post ‘என் பெயரில் வீடு இல்லை’ லட்சக்கணக்கான பெண்களை வீட்டு உரிமையாளராக்கி உள்ளேன்: குஜராத்தில் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Modi ,Gujarat ,Bodeli ,
× RELATED அப்பாவி உயிர்கள் போன பிறகு செயல்படும்...