×

தஞ்சாவூர் அருகே சார்ஜ் போட்டபடியே பேசிக்கொண்டிருந்தபோது செல்போன் வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சார்ஜ் போட்டபடியே செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது செல்போன் வெடித்ததில் கபிஸ்தலம் பகுதியில் வாட்ச் கடை நடத்தி வந்த பெண் உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா விசித்திரராஜபுரம் கிராமத்தில் வசித்து வந்தவர் பிரபாகரன் என்பவரின் மனைவி கோகிலா, இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். பெண்ணின் கணவர் பிரபாகரன் ஏற்கனவே இறந்துவிட்டார்.

கபிஸ்தலம் பகுதியில் கோகிலா வாட்ச் கடை நடத்தி வந்துள்ளார். அப்போது அவர் கடையில் அமர்ந்து சார்ஜ் போட்டபடியே செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென செல்போன் வெடித்து சிதறியுள்ளது. விபத்தில் கடை முழுவதும் தீ பரவியுள்ளது.

இந்த விபத்தில் மிகுந்த தீக்காயங்களுடன் கோகிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து பாபநாசம் தீயணைப்பு நிலை அலுவலர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். செல்போன் வெடித்து சிதறியதில் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தஞ்சாவூர் அருகே சார்ஜ் போட்டபடியே பேசிக்கொண்டிருந்தபோது செல்போன் வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Kapistalam ,Babanasam, Thanjavur district ,Dinakaran ,
× RELATED கபிஸ்தலம் அருகே மது விற்ற 2 பேர் கைது