×

கடவூர் மற்றும் தோகைமலையில் சர்க்கரைவல்லிக்கிழங்கு சாகுபடி துவக்கம்

தோகைமலை : கடவூர் மற்றும் தோகைமலை பகுதிகளில் சர்க்கரைவல்லிக்கிழங்கு சாகுபடியை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.கரூர் மாவட்டம் கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் சர்க்கரைவல்லிக்கிழங்கு சாகுபடியில் தற்போது விவசாயிகள் கொடிகளை நடவு செய்து பணிகளை தொடங்கி உள்ளனர்.கடந்த சில வருடங்களாக பருவமழை குறைந்ததால், விவசாயிகள் குறிப்பிட்ட அந்தந்த பருவத்திற்குள் விவசாயம் செய்ய முடியாமலும், சாகுபடி செய்த பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் தவித்தனர்.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை தொடர்ந்து கனிசமாக பொழிந்து வருகிறது. இதனால் கடவூர் மற்றும் தோகைமலையில் உள்ள கிணற்று பாசன விவசாயிகள் தங்களது விவசாய தோட்டங்களில் பல்வேறு பயிர் சாகுபடிகளை செய்து வருகின்றனர். இதேபோல் பரவலான விவசாயிகள் தங்களது வயல்களில் சக்கரவள்ளி சாகுபடியை தொடங்கி உள்ளனர். இந்த ஆண்டு ஆவணி மாத கடைசி வாரத்தில் சர்க்கரைவல்லிக்கிழங்கு விதை கொடிகளை விவசாயிகள் நடவுசெய்து சாகுபடியை தொடங்கி வருகின்றனர். நடவு செய்யப்பட்ட கொடிகள் 90 முதல் 110 நாட்களுக்குள் கிழங்கு முதிர்ச்சியடைந்து அறுவடைக்கு வரும்.

இதில் அடி உரமாக கால்நடைகளின் எருகளை இடும் விவசாயிகள் 70ம் நாளில் அதிக மகசூல் பெறுவதற்காக யூரியா உரம் செலுத்தப்படும் வேண்டும்.சர்க்கரைவல்லிக்கிழங்கு சாகுபடியில் அதிகமான நோய் தாக்கங்கள் இருக்காது என்றும் பச்சை பூச்சிகளின் தாக்கம் வந்தால் தனியார் மருந்து கடைகளில் இதற்கான மருந்துகளை பெற்றுதெளித்தால் சரியாகிவிடும்.
சாகுபடியின்போது ஒன்று முதல் 2 முறை மட்டுமே களை எடுத்து, வாரம் ஒருமுறை தண்ணீர் இடவேண்டும். முறையாக பராமரித்து வந்தால் அறுவடை காலங்களில் ஒரு ஏக்ககருக்கு 7 முதல் 10 டன் வரை மகசூல் கிடைக்கும்.

கடவூர் மற்றும் தோகைமலை பகுதியில் சாகுபடி செய்யபடும் சர்க்கரைவல்லிக்கிழங்குகள் கரூர், திருச்சி, திண்டுக்கல் போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
இதில் குறிப்பாக ஒட்டன்சத்திரம், திருச்சி போன்ற சந்தைகளில் கடந்த ஆண்டு ஒரு கிலோ சிகப்பு ரகசக்கரவள்ளி கிழங்கு கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரையும், வெள்ளை ரக கிழங்கு ரூ.5 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப் பட்டது. இடைத்தரகர்கள் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு பெற்று செல்வதாகவும் விவசாயிகள் கூறுப்படுகிறது.

இந்த ஆண்டு விலை ஏற்றமடையும் என்ற நம்பிக்கையில் பல இடங்களில் சர்க்கரைவல்லிக்கிழங்கு சாகுபடிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். சர்க்கரைவல்லிக்கிழங்கிற்கான விற்பனை மற்றும் கொள்முதலுக்கான வழி முறைகளை அரசு ஏற்று நடத்தி விவசாயிகளையும் விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

The post கடவூர் மற்றும் தோகைமலையில் சர்க்கரைவல்லிக்கிழங்கு சாகுபடி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Kadavur ,Dogaimalle ,Dogimalai ,Karur District ,Doghaimalai ,Doghimalay ,
× RELATED ஜூலை, ஆகஸ்ட் மாதம் நடவுக்கு ஏற்ற...