×

அடி சும்மா இடி மாறி விழுந்திருக்கு போல.. அன்று – டெல்லியே சொன்னாலும் கேட்க மாட்டேன்… இன்று – டெல்லி தலைமைதான் பேசுவாங்க அண்ணே… பல் பிடுங்கிய பாம்பான அண்ணாமலை

அதிமுக-பாஜ தலைவர்களிடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டு வந்தது. கடந்த மார்ச் மாதம் அதிமுக-பாஜ தலைவர்களிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், 2.3.23 அன்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறுகையில், ‘அண்ணாமலை தோசை சுடவோ, இட்லி சுடவோ, சப்பாத்தி சுடவோ வரல… எப்போதும் என்னுடைய தலைமை பண்பு மேனேஜர் போல இருக்காது. மேனேஜர் மாறி மேனேஜர் பண்ணிக்கிட்டு, தாஜா பண்ணிக்கிட்டு, அப்படியே யாராவது கோவமா இருந்தாங்கனா வீட்டிற்கு நள்ளிரவில் போய் டீ கொடுத்துட்டு அவங்கள சமாதானப்படுத்தி இன்னொரு பொறுப்பு கொடுத்து அப்படி இல்ல.

நான் தலைவன். தலைவன் எப்படி இருக்கணுமோ அப்படிதான் நான் இருப்பேன். சில முடிவுகள் சில பேருக்கு அதிர்ச்சியளிக்கத்தான் செய்யும். அதை கண்டுக்காம போயிடணும். நான் தலைவரை போல சில டிசிஷன் கட்சியின் நன்மைக்கு எடுக்க வேண்டுமென்றால் கொஞ்சம் கூட பயமில்லாமல் எடுப்பேன். ஓ டெல்லி இப்படி சொல்லிடுமா? இவங்க இப்படி சொல்லிடுவாங்களா? இவங்க போய் டெல்லியில போய் போட்டு கொடுத்துடுவாங்களா? இதையெல்லாம் பார்த்தவன்தான் நான். என் உடம்பில் ரத்தம் இருக்கும்வரை கூட்டணியில் இருந்தால்கூட ஜூனியர் பார்ட்னரு படிஞ்சி போகணும்…அது அண்ணாமலை ரத்தத்திலேயே கிடையாது. நான் இருக்கும்வரை அப்படிதான் இருக்கும். கஷ்டமா இருந்த எல்லாரும் கிளம்பி போங்க. 8,000தானே டெல்லிக்கு டிக்கெட்.. போய் யார யார பார்க்கணுமோ மாத்திட்டு வர பாருங்க… டெல்லியில் இருந்து யார் கூப்பிட்டு சொன்னாலும் மாத்திக்க மாட்டேன். என்னுடைய அரசியல் இப்படிதான். டெல்லியில் இருந்து கூப்பிட்டு சொல்லி பதுசா மேனேஜர் மாறி மாத்திக்கிட்டோம்னா தேசிய கட்சிகளுக்கு எல்லாம் இங்கு வேலையே இல்லை’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், அதிமுகவை அண்ணாமலை தொடர்ந்து அவமானப்படுத்தி வந்ததால் பாஜவுடனான கூட்டணியை முறித்து கொள்வதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதுகுறித்து கோவையில் நடைபயணத்தில் இருந்த அண்ணாமலையிடம் கேட்டபோது, ‘பாத யாத்திரையின்போது அரசியல் பேச விரும்பவில்லை. என்னுடைய ஒரே ஒரு கருத்து என்னவென்றால், அதிமுகவினுடைய அறிக்கையை படித்தோம். ரிசொலுசன் போட்டிருக்காங்க. எங்களுடைய தேசிய தலைமை இது குறித்து பேசுவாங்க அண்ணே. சரியான நேரத்தில் பேசுவாங்க. நாங்கள் பத்திரிகையாளர்களை சந்திக்கும்போது பின்னர் பேசுவோம். பாஜ ஒரு தேசிய கட்சி. எல்லாவற்றுக்கும் ஒரு புரொசிஜர் இருக்கு. தேசிய தலைவர்கள் இருக்காங்க. அவர்களது கவனத்துக்கு இது சென்றிருக்கிறது. எனவே இது குறித்து தேசிய தலைமை பேசும். இதுதான் எனது இன்றைய கருத்து’ என்று கூறியிருந்தார்.

அதிமுக கூட்டணியை முறித்து கொண்டதை டெல்லி பாஜ தலைமை எதிர்பார்க்கவில்லையாம். எவ்வளவு அடி வாங்கினாலும் வெளியேற மாட்டார்கள். குட்டி போட்ட பூனை மாறி சுத்தி சுத்தி வருவாங்க என்று நினைத்தார்களாம்… ஆனால், எடப்பாடியின் அதிரடி முடிவால் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் உள்ளனர். அதிமுகவின் தயவு பாஜவுக்கு தேவை என்பதால், கூட்டணி முறிவு குறித்து யாரும் கருத்து சொல்லக்கூடாது என்று டெல்லி பாஜ தலைமை உத்தரவு போட்டுள்ளது. மேலும் அண்ணாமலையை அழைத்து டெல்லி பாஜ தலைமை செம்ம டோஸ் விட்டு, டெல்லிக்கு வர சொல்லி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால்தான் நக்கல், நையாண்டியுடன் வீரவசனம் பேசும் அண்ணாமலை பல் பிடுங்கிய பாம்பாக அமைதியாகி விட்டதாக கூறப்படுகிறது.

The post அடி சும்மா இடி மாறி விழுந்திருக்கு போல.. அன்று – டெல்லியே சொன்னாலும் கேட்க மாட்டேன்… இன்று – டெல்லி தலைமைதான் பேசுவாங்க அண்ணே… பல் பிடுங்கிய பாம்பான அண்ணாமலை appeared first on Dinakaran.

Tags : Delhi ,Annamalai ,Mukhakha-Baja ,Anne ,Anamalai ,
× RELATED அண்ணாமலைக்கு எதிரான வழக்கில் விசாரணை...