×

பொது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பழநி நகருக்குள் திரியும் பன்றிகள் அப்புறப்படுத்தப்படும்: நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை

 

பழநி, செப். 27: பொது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பழநி நகருக்குள் திரியும் பன்றிகள் அப்புறப்படுத்தப்படும் என நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பழநி நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனுமதி இல்லாமல் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் அச்சுறுத்தலாகவும், பொது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும் பன்றிகளை வளர்ப்பதும், தெருக்கள் மற்றும் கழிவு நீர் கால்வாய்களில் திரிய விடுவதும் கடுமையான குற்றமாகும்.

எனவே, பழநி நகருக்குள் எவரும் பன்றிகளை வளர்க்கவோ, திரிய விடுவதோ கூடாது, அதனையும் மீறி வளர்க்கப்படும், சாலையில் திரிய விடப்படும் பன்றிகள் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் நகராட்சி மூலம் பிடிக்கப்பட்டு நகருக்கு வெளியே அப்புறப்படுத்தப்படும். பிடிக்கப்பட்ட பன்றிகளின் மீது எவரேனும் உரிமை கொண்டாடி வந்தால் அவர்கள் மீது தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு சட்டம் 1939 மற்றும் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920ம் சட்ட விதிகளின்கீழ் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பழநி நகரம் கோயில் நகரம் என்பதாலும், தற்போது ஐயப்ப பக்தர்கள் வருகை துவங்க உள்ளதாலும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நலன் கருதி இந்நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு நகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post பொது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பழநி நகருக்குள் திரியும் பன்றிகள் அப்புறப்படுத்தப்படும்: நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Palani city ,Palani ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி