×

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடியின் தொடர்பு பற்றி பேச தனபாலுக்கு தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச, கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த மறைந்த கனகராஜின் சகோதரர் தனபால், சமீப காலமாக அந்த வழக்கு தொடர்பாக பேட்டியளித்து அதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதையடுத்து, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதின்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில், கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள நிலையில், தன் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் தனபால் பொய்யான தகவல்களை கூறி வருவதாக கூறப்பட்டுள்ளது. கொடநாடு வழக்கில் சாட்சிகளை கலைத்ததாக கைது செய்யப்பட்ட தனபால், மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஜாமீன் பெற்றுள்ளார் என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி, கடந்த 2017ம் ஆண்டு கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கனகராஜ் சாலை விபத்தில் பலியானபோது அதில் யாருக்கும் தொடர்பில்லை என்று அளித்த பேட்டியளித்த தனபால், தற்போது முற்றிலும் முரணாக எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேசி வருகிறார் என்று வாதிட்டார்.

மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆதாரங்களில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தனபால் அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ளார் என்பதற்கு ஆரம்ப கட்ட முகாந்திரம் உள்ளது. தொடர்ந்து இதுபோல பேசுவதற்கு அனுமதித்தால் அது மனுதாரருக்கு ஈடுகட்ட முடியாத இழப்பை ஏற்படுத்தும் என்பதால் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு படுத்தி பேச தனபாலுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மேலும், இந்த மனுவுக்கு அக்டோபர் 10ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தனபாலுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

The post கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடியின் தொடர்பு பற்றி பேச தனபாலுக்கு தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Dhanapal ,Edappadi ,Koda Nadu ,Chennai ,AIADMK ,general secretary ,Edappadi Palaniswami ,Kodanadu ,
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்களில்...