×

கோட்டையூரில் 8.61 ஏக்கர் நிலம் விற்பனை செய்ததில் ரூ.7.7 கோடியை ஏமாற்றிய சென்னை தொழிலதிபர்கள்: கமிஷனர் அலுவலகத்தில் நடிகை கவுதமி பரபரப்பு புகார்

சென்னை: சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை கவுதமி அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை அக்கரை பக்தி வேதாந்தா சுவாமி அவென்யூ பகுதியில் வசித்து வருகிறேன். நான் பல்வேறு மொழிகளில் 125க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளேன். எனது உடல் நிலை பாதிப்பு காரணமாக நான் வாங்கிய அசையா சொத்துகளை என்னால் நிர்வகிக்க முடியவில்லை. 2004ம் ஆண்டு எனது மகளுக்கு 4 வயது இருக்கும் போது எனக்கு புற்றுநாய் இருப்பது கண்டறியப்பட்டது. எனக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால், எனது குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்க எனது தாயார் டாக்டர் வசுந்தரா தேவியும், நானும் திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் 10 ஏக்கர் நிலத்தை கடந்த 1990ம் ஆண்டு வாங்கினோம். அதில் 8.61 ஏக்கர் நிலம் எனது பெயரில் இருந்தது. எனது தாய் கடந்த 2000ம் ஆண்டு இறந்துவிட்டார்.

இந்நிலையில், வேளச்சேரியை சேர்ந்த அழகப்பன் மூலம் அண்ணாநகர் 6வது அவென்யூவை சேர்ந்த தொழிலதிபர் பலராமன் மற்றும் செங்கல்பட்டு மகேந்திரா சிட்டி பகுதியை சேர்ந்த ரகுநாதன் ஆகியோர் அறிமுகமாகினர். இருவரும் நம்பிக்கையான நபர்கள் என்பதால் எனது பெயரில் உள்ள 8.16 ஏக்கர் நிலத்தை நல்ல விலைக்கு விற்பனை செய்து தருவதாக உறுதி அளித்தனர். அதனால் அந்த நிலத்தை கடந்த 2015ம் அண்டு பலராமன், ரகுநாதன் ஆகியோருக்கு தனி பொது அதிகார ஆவணம் எழுதி கொடுத்தேன். பிறகு இந்த இடத்தை தனியார் நிறுவனம் வாங்க விரும்புவதாக கூறினர். மேலும், நிலத்தில் பிரச்னை இருப்பதாக கூறி ரூ.4.10 கோடிக்கு விற்பனை செய்ததாக 2 தவணையில் பணத்தை கொடுத்துவிட்டு கையெழுத்து பெற்றனர்.

கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து கடிதம் ஒன்று வந்தது. அதில் கோட்டையூரில் உள்ள சொத்துகள் ரூ.11,17,38,907 க்கு விற்பனை செய்ததில் கேப்பிட்டல் கெய்ன்ஸ் டெக்ஸ் ரூ.2,61,25,637 வருமான வரி கட்டவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.அதன் பிறகு எனது அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டதை கண்டு நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். இதுகுறித்து நான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது, நிலம் விற்பனை தொகையில் 25 விழுக்காடு ரூ.2,61,25,637 கட்டவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நான் ரூ.65,31,500 கட்டியுள்ளேன். இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

பின்னர் எனது சொத்தை விற்பனை செய்தது தொடர்பான ஆவணங்களை சுங்குவார்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நகல் எடுத்து பார்த்த போது தான், நிலத்தை விற்பனை செய்ய பவர் ஏஜென்டாக இருந்த பலராமன், ரகுநாதன் ஆகியோர் கடந்த 6.1.2016ம் ஆண்டு 8.16 ஏக்கர் நிலம் விற்பனை செய்ததன் மூலம் ரூ.11,17,38,907 பணம் பெற்றுள்ளனர். அதில் ரூ.4.10 கோடி மட்டும் பணத்தை கொடுத்துவிட்டு மீதமுள்ள ரூ.7,07,38,908 பணம் கொடுக்காமல் இருவரும் பரித்து கொண்டு ஏமாற்றி விட்டனர். எனவே இருவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு நடிகை கவுதமி புகார் அளித்துள்ளார்.

புகாரின் மீது நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஸ்வரிக்கு போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு-2 துணை கமிஷனர் இந்த ேமாசடி தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார். நடிகை கவுதமி கடந்த 11ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நிலத்தை விற்பனை செய்து தருவதாக ரூ.25 கோடி மதிப்புள்ள சொத்துகளை ஏமாற்றிவிட்டதாக தொழிலதிபர் அழகப்பன் மீது புகார் அளித்தார். அந்த புகாரின்படி தற்போது திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

The post கோட்டையூரில் 8.61 ஏக்கர் நிலம் விற்பனை செய்ததில் ரூ.7.7 கோடியை ஏமாற்றிய சென்னை தொழிலதிபர்கள்: கமிஷனர் அலுவலகத்தில் நடிகை கவுதமி பரபரப்பு புகார் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kotdaiyur ,Gauthami ,Gautami ,Chennai Municipal Police Commissioner ,Akarai Bhakti ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...