×

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழைக்காலங்களில் ஏற்படும் தொற்றுநோய் தடுப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் மழைக்காலங்களில் ஏற்படும் நோய்கள் டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய் தடுப்பு குறித்த செங்கல்பட்டு மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கலெக்டர் ராகுல்நாத், முன்னிலையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் ஒவ்வொரு துறையும் மேற்கொள்ள வேண்டிய நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினர். மழைக்காலமாக இருப்பதால் காய்ச்சல் பலருக்கு வருகிறது. பொது சுகாதாரத்துறையினர் காய்ச்சல், கண்காணிப்பு மற்றும் தொடர் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். இவர்கள் களப்பணியில் ஈடுபடும்போது, தோழமை துறைகளை ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும்.

ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி, மாநகராட்சி மூலம் நியமனம் செய்யப்பட்டு பணிபுரியும் தற்காலிக கொசுப்புழுத் தடுப்பு பணியாளர்கள், வீட்டைச் சுற்றியுள்ள பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நல்ல நீரில் தான் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் உருவாகுவதால் அந்தக் கொசு உற்பத்தியைத் தடுக்க வேண்டும். குளோரினேசன் செய்யப்பட்ட பாதுகாப்பான குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த குடிநீரை அந்தந்தப் பகுதி சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்து, இப்பணியை மேம்படுத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். அனைத்து ஊராட்சிப் பகுதிகளிலும் பாதுகாப்பான குடிநீரை உறுதி செய்ய கால முறைப்படி குடிநீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்ப வேண்டும்.

டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்புப் பணிகளை துரிதப்படுத்த ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் தேவைப்படும் கொசு ஒழிப்பு தடுப்பு பணியாளர்களை‌ தற்காலிக நோய் தடுப்புப் பணியாளர்களை நியமித்துக் கொள்ளலாம். பொது இடங்களில் உள்ள குப்பை, பிளாஸ்டிக் கப்புகள், தேவையற்ற டயர்கள், மழைநீர் தேங்கும் கட்டமைப்புகள் ஆகியவற்றை அகற்ற வேண்டும். பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு ஏதேனும் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாகப் பெற்றோருகு தெரிவித்து, சிகிச்சை அளிக்கவும், மேலும் பள்ளிக்கு வராத குழந்தைகளுக்கு ஏதேனும் காய்ச்சல் இருக்கிறதா என அறிந்தும் அவர்கள் விவரங்களை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குத் தெரிவிக்கவும் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊட்டச்சத்து மற்றும் சமூக நலத்துறையினர் அங்கன்வாடிகளில் பயிலும் குழந்தைகளுக்கு ஏதேனும் காய்ச்சல் இருப்பின், அந்தந்தப் பகுதி சுகாதாரத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். மருத்துவத் துறையைப் பொறுத்தமட்டில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேரும் காய்ச்சல் கண்டவர்கள் விவரம், சுகாதாரத் துறையினருக்குத் தகவல் தரப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான இடவசதி, மருந்து மாத்திரைகள் முன்னேற்பாடாக செய்து வைத்திடல் வேண்டும். தனியார் மருந்தகங்களில் மருத்துவர் பரிந்துரையின்றி மருந்துகள் விநியோகம் செய்யக்கூடாது. இது தொடர்பாக மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சித்த மருத்துவத்துறை, அனைத்து காய்ச்சல் கண்ட நபர்களுக்கும் நிலவேம்பு கஷாயம் வழங்க வேண்டும்.

குடிநீர் வடிகால் வாரியம் மழைக்காலங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேல்நிலை தொட்டிக்கு வரும் குழாய்கள், தொட்டியிலிருந்து வெளியேறும் குழாய்கள், தெருக்களில் விநியோகிக்கப்படும் குழாய்களில் உடைப்புகள் இருப்பின் உடனே கண்டறிந்து சீர் செய்யப்பட வேண்டும். மேற்கண்ட துறைகள் அனைத்தும், தொடர்ச்சியான கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு நோய்த்தொற்று பாதிப்பு இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து, மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தில் மழைக்காலங்களில் ஏற்படும் தொற்று நோய்களுக்கான மருந்து நிலவேம்பு குடிநீரை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பொதுமக்களுக்கு வழங்கினார்.

இந்தக் கூட்டத்தில், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் காமராஜ், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆனந்த் குமார் சிங், செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் செம்பருத்தி துர்கேஷ், திருப்போரூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் இதயவர்மன், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் உதயா கருணாகரன்,

புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சங்கீதா பாரதிராஜன், லத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுப்புலட்சுமி பாபு, மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்வி, அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கண்ணன், நந்திவரம்-கூடுவாஞ்சேரி ஒன்றியக்குழு தலைவர் கார்த்திக் தண்டபாணி, செங்கல்பட்டு நகராட்சி மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், மறைமலை நகராட்சி நகர்மன்ற தலைவர் சண்முகம், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் பரணிதரன், வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post செங்கல்பட்டு மாவட்டத்தில் மழைக்காலங்களில் ஏற்படும் தொற்றுநோய் தடுப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu district ,Minister ,D. Mo. Anparasan ,Chengalpattu ,Chiramalainagar ,
× RELATED வாயலூர் அருகே ஈசிஆர் சாலையில் நடந்த...