×

முன்விரோதம் காரணமாக நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வாலிபருக்கு அரிவாள் வெட்டு: தடுத்த 2 நண்பர்களையும் வெட்டிய ரவுடிகள் கைது

சென்னை: விருகம்பாக்கம் பகுதியில் முன்விரோதம் காரணமாக வாலிபர் ஒருவருக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு விழுந்தது. அதை தடுக்க வந்த அவரது நண்பர்கள் 2 பேரையும் வெட்டிய ரவுடிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். விருகம்பாக்கம் காந்தி நகரை சேர்ந்தவர் விக்னேஷ் (22). இவர் மீது அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. விக்னேசுக்கும், சின்னதம்பி (எ) அலாட் (22) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விக்னேஷ் தனது நண்பர்களான ராஜபாண்டி (26), அரிகிருஷ்ணன் (27) ஆகியோருடன் அதே பகுதியில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு பைக்கில் வந்த சின்னதம்பி மற்றும் அவரது நண்பரான விபின் ஆகியோர், விக்னேஷை கண்டதும், பைக்கை நிறுத்திவிட்டு தகராறு செய்துள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே தகராறு முற்றியது. ஆத்திரமடைந்த சின்னதம்பி மற்றும் அவரது நண்பன் விபின் ஆகியோர், மறைத்து வைத்திருந்த அரிவாளால் விக்னேஷை வெட்டினர். அங்கிருந்து தப்பி ஓட முயன்ற அவரை, ஓட ஓட விரட்டி வெட்டினர். இதை பார்த்த அவரது நண்பர்கள் ராஜபாண்டி மற்றும் அரிகிருஷ்ணன் ஆகியோர் சின்னதம்பியை தடுக்க முயன்றனர்.

இதனால், அவர்களையும் சின்னதம்பி வெட்டிவிட்டு அங்கிருந்து நண்பருடன் தப்பினார். இதில் படுகாயமடைந்த 3 பேரையும் அலறி துடித்தனர். தகவலறிந்த விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் பூபதி ராஜா தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் எம்ஜிஆர் நகர் மேட்டுக்குப்பம் பகுதியில் மறைந்து இருந்த ரவுடி சின்னதம்பி மற்றும் அவரது நண்பர் விபின் ஆகியோரை நேற்று காலை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கத்திகள், ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

The post முன்விரோதம் காரணமாக நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வாலிபருக்கு அரிவாள் வெட்டு: தடுத்த 2 நண்பர்களையும் வெட்டிய ரவுடிகள் கைது appeared first on Dinakaran.

Tags : Scythe ,CHENNAI ,Virugambakkam ,Scythed ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...