×

கோவிந்தா… கோவிந்தா… கோஷம் முழங்க குணசீலம் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

திருச்சி: குணசீலம் பெருமாள் கோயிலில் இன்று தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. தேருக்கு பின்னால் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தனர். திருச்சி மாவட்டம் குணசீலத்தில் தென் திருப்பதி என்றழைக்கப்படும் பிரசன்ன வேங்கடாஜலபதி கோயில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவம் 11 நாட்கள் நடைபெறும். அதன்படி கடந்த 18ம்தேதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் அனுமந்த வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், அன்னவாகனம், குதிரை வாகனம், வெள்ளிக்கருட வாகனத்தில் உபயநாச்சியார்களுடன் பெருமாள் எழுந்தருளி திருவீதி உலா வந்தார்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று(26ம் தேதி) காலை நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான தேரில் பூதேவி, தேவி தாயாருடன் சீனிவாசபெருமாள் எழுந்தருளினார். பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டவாறு தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். தேர் கோயிலை சுற்றி வலம் வந்தது. தேருக்கு பின்னால், நூற்றுக்கணக்கான பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற அங்கப்பிரதட்சணம் செய்தபடி சென்றனர். தமிழகத்தில் வேறு எந்த கோயிலிலும் தேருக்கு பின்னால் பக்தர்கள் அங்கபிரதசட்சணம் செய்வது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

The post கோவிந்தா… கோவிந்தா… கோஷம் முழங்க குணசீலம் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம் appeared first on Dinakaran.

Tags : Govinda ,Gunaseelam ,Perumal Temple ,Trichy ,Gunaseelam Perumal Temple ,Trichy District ,Kunaseelam Perumal ,
× RELATED கோவிந்தா! கோவிந்தா! கோஷத்துடன்...