×

பிரபல யூடியூபர் டி.டி.எஃப்.வாசனின் ஜாமின் மனு 2-வது முறையாக தள்ளுபடி; காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் அதிரடி

காஞ்சிபுரம்: பிரபல யூடியூபர் டி.டி.எஃப்.வாசனின் ஜாமின் மனு 2-வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டது. கடந்த 17ம் தேதி சென்னையில் இருந்து மகாராஷ்டிரா செல்லவிருந்த பிரபல யூடியூபர் டி.டி.எஃப். வாசன் காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரம் அருகே சாகசத்தில் ஈடுபட முயன்றபோது விபத்தில் சிக்கினார். சாகசம் செய்ய முயன்றபோது சாலையோர பள்ளத்தில் இருசக்கர வாகனம் விழுந்ததில் டிடிஎஃப் வாசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து டி.டி.எஃப். வாசன் மீது பாலுசெட்டி சத்திரம் போலீஸ் வழக்குபதிவு செய்திருந்தது.

உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியது, கவனக்குறைவாக செயல்படுதல் உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வாசன் தரப்பில் ஜாமின் கேட்டு ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி, டிடிஎப் வாசனுக்கு ஜாமின் தர மறுத்ததோடு அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டிடிஎப் வாசன், தனக்கு ஜாமின் கோரி 2வது முறையாக இன்று காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஜாமின் மனுவை விசாரித்த நீதிபதி செம்மல், ஆர்டிஓ அறிக்கை வந்தபின் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்து 2வது முறையாக யூடியூபர் டி.டி.எஃப். வாசனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார். டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.

The post பிரபல யூடியூபர் டி.டி.எஃப்.வாசனின் ஜாமின் மனு 2-வது முறையாக தள்ளுபடி; காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : TDF ,Vasan ,Kanchipuram District Court ,Kanchipuram ,Chennai ,TDF Vasan ,Dinakaran ,
× RELATED யூ டியூபர் டிடிஎஃப் வாசனின், இருசக்கர...