×

ஓராண்டில் பொதுமக்களிடம் இருந்து 1.63 லட்சம் புகார்கள் தமிழகம் முழுவதும் 22,849 மனுக்கள் மீது நடவடிக்கை: சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார் தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த ஓராண்டில் பொதுமக்களிடம் இருந்து 1.63 லட்சம் புகார்கள் பெற்றப்பட்டு, அதில் 22,849 மனுக்கள் மீது வழக்கு பதிவு செய்து சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தமிழ்நாடு சைபர் க்ரைம் கூடுதல் கமிஷனர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சைபர் க்ரைம் கட்டணமில்லா 1930 எண்ணிற்கு நாள் ஒன்றுக்கு மாநிலம் முழுவதிலும் இருந்து 900 அழைப்புகள் வருகிறது. அந்த அழைப்புகளின் படி தினசரி 100 புகார்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த ஓராண்டில் சைபர் க்ரைம் பிரிவுக்கு 1,63,955 அழைப்புகள் பெறப்பட்டுள்ளன. அந்த புகார்கள் மீது விசாரணை நடத்தி 22,849 புகார்கள் மீது என்சிஆர்பியில் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முன்பைவிட தற்போது இணைய வழி குற்றங்கள் அதிக எண்ணிக்கையில் நடந்து வருகிறது. அதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மாநில சைபர் க்ரைம் பிரிவு எடுத்து வருகிறது. ஆன்லைன் மோசடி, ஹேக்கிங், அடையாள திருட்டு உள்ளிட்டவையே அதிகமாக உள்ளது. இதுபோன்ற மோசடி நபர்களிடம் இருந்து தப்பிக்க பொதுமக்கள் தங்களது ஸ்மார்ட் போன்கள், கணினிகள், டேப்லெட்டுகள் போன்ற சாதனங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

வைரஸ் தடுப்பு மென்பொருள் மற்றும் செயலிகளை புதுப்பித்து வைத்திருக்க வேண்டும். ஆன்லைன் தளங்களில் பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட தகவல்களை பகிரும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆன்லைன் மூலம் வங்கி கணக்குகளை கையாளும் போது, ஓடிபியை கவனமாக பயன்படுத்த வேண்டும். சைபர் குற்றவாளிகள் முக்கியமான நிறுவனங்களில் இருந்து பேசுவதாக தங்களை அடையாளப்படுத்தி மின்னஞ்சல்கள், செய்திகள், தொலைபேசி அழைப்புகள் மூலம் தொடர்பு கொண்டு ஓடிபிக்களை பெற்று மோசடியில் ஈடுபடுகின்றனர். எனவே இதுபோன்ற மோசடி நபர்களிடம் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். அப்படி ஏதேனும் மோசடியில் பணத்தை இழந்தால் உடனே சைபர் க்ரைம் கட்டணமில்லா எண்ணிற்கு புகார் அளிக்க வேண்டும். அந்த புகாரின படி மோசடி நபர்களின் வங்கி கணக்கை முடக்கி உடனே நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஓராண்டில் பொதுமக்களிடம் இருந்து 1.63 லட்சம் புகார்கள் தமிழகம் முழுவதும் 22,849 மனுக்கள் மீது நடவடிக்கை: சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,DGB ,Sanjay Kumar ,Chennai ,Dinakaran ,
× RELATED குரல் குளோனிங்கை பயன்படுத்தி...