×

கோயில்களில் நேரடி நியமனம் 5 பெண் ஓதுவார்கள் உட்பட 15 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார்

சென்னை: கோயில்களில் நேரடி நியமனம் மூலம் 5 பெண் ஓதுவார்கள் உட்பட 15 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணையினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார். இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கோயில்களுக்கு நேரடி நியமனம் மூலம் தேர்வுசெய்யப்பட்ட 5 பெண் ஓதுவார்கள் உட்பட 15 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணைகளையும், கோயில்களில் பணிபுரிந்து பணிகாலத்தில் உயிரிழந்த 3 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளையும் நேற்று வழங்கினார். பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்து சமய அறநிலையத்துறையில் கோயில் நிர்வாகங்களை மேம்படுத்திடும் வகையில் அவ்வப்போது ஏற்படும் அலுவலர் மற்றும் பணியாளர் காலிப்பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலமாகவும், இந்து சமய அறக்கொடைகள் சட்டவிதிகளின்படி நேரடியாக தேர்வு செய்தும், கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் 15 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. ஆணுக்கு பெண் நிகர் என்பதை நிரூபிக்கின்ற வகையில் திராவிட மாடல் ஆட்சியில் ஏற்கனவே 5 கோயில்களில் பெண் ஓதுவார்கள் பணிபுரிந்து வருகிறார்கள். தற்போது புதிதாக நியமிக்கப்பட்டிருக்கின்ற 15 ஓதுவார்களில் 5 பெண் ஓதுவார்கள் நியமனம் என்பது உண்மையிலேயே பாராட்டக்கூடியது.

இதுவரையில் கோயில்களில் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு சுமார் 34 ஓதுவார் பணியிடங்கள் நிரப்பப்பட்டு இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 183 ஓதுவார் பணியிடங்களில் இதுவரை 107 ஓதுவார்கள் கோயில்களில் பணிபுரிந்து வருகின்றார்கள். நிச்சயமாக படிப்படியாக அனைத்து கோயில்களில் இருக்கின்ற ஓதுவார் பணியிடங்களை விரைவில் நிரப்புவதற்குண்டான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஏற்கனவே அர்ச்சகர் பயிற்சி பயின்ற 3 பெண்கள் விரைவில் உதவி அர்ச்சகர் பணிக்கு நியமிக்கப்பட இருக்கின்றார்கள். இதுவரை நியமிக்கப்பட்டுள்ள 10 பெண் ஓதுவார்களுமே திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்று பேசினார்.

The post கோயில்களில் நேரடி நியமனம் 5 பெண் ஓதுவார்கள் உட்பட 15 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Minister ,PK Shekharbabu ,CHENNAI ,
× RELATED வாயால் மட்டுமே வடை சுட்டுக்கொண்டு...