×

பாஜவை பிரியும் அதிமுக முடிவை திராவிட இயக்கங்கள் வரவேற்கும்: துரை வைகோ கருத்து

கோவில்பட்டி: ‘பாஜவை விட்டு விலகும் அதிமுகவின் முடிவை அனைத்து திராவிட இயக்கங்களும் வரவேற்கும்’ என்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ கூறினார். சென்னை – நெல்லை இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ விரைவு ரயில், கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வலியுறுத்தி நேற்று மாலை மதிமுக சார்பில் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தலைமை வகித்து பேசியதாவது: கோவில்பட்டி மிகப்பெரிய வணிக நகரம். எதிர்காலத்தில் மாவட்டமாக உருவாகும்போது அதன் தலைநகராகவும் கோவில்பட்டி இருக்கப் போகிறது.

இவ்வளவு முக்கியமான, மையப்பகுதியில் உள்ள கோவில்பட்டி நகரை ரயில்வே துறை புறக்கணிக்கலாமா? வந்தே பாரத் ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிற்கும் வரை மதிமுக சார்பில் போராட்டங்கள் நடைபெறும். வைகோவோ, மதிமுகவோ தமிழருக்கான உரிமைப் போராட்டங்களில் இருந்து பின்வாங்கியது இல்லை. மக்கள் பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டித்தான் வைகோ செயல்படுகிறார். வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நிற்பதற்காக கடம்பூர் ராஜூ எம்எல்ஏ எடுக்கும் முயற்சிகளுக்கு மதிமுக துணை நிற்கும்.

அதேபோல் மக்கள் பிரச்னைகளுக்காக அரசியல் எல்லைகளை கடந்து அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒன்று திரண்டன என்ற முன் உதாரணத்தை நாம் கோவில்பட்டியில் தொடங்குவோம், இவ்வாறு பேசினார். பின்னர் துரை வைகோ நிருபர்களிடம் கூறுகையில், ‘என்னை பொறுத்தவரை திராவிட இயக்கங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து தமிழ்நாட்டில் இருந்து மதவாத சக்தியான பாஜவை வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்ற வேண்டும். பாஜவை விட்டு விலகுவது என்ற முடிவை அதிமுக எடுத்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து திராவிட இயக்கங்களும் வரவேற்கும்’ என்றார்.

The post பாஜவை பிரியும் அதிமுக முடிவை திராவிட இயக்கங்கள் வரவேற்கும்: துரை வைகோ கருத்து appeared first on Dinakaran.

Tags : Baja ,Durai Vigo ,Govilbatti ,Mukmukha ,Baja Fresh ,Durai Vaigo Concept ,Dinakaran ,
× RELATED பாஜ பிரமுகரின் உறவினர் வீட்டில்...