பாட்னா: பீகாரில் கடனை வட்டியுடன் திரும்பி செலுத்திய பிறகும் கூடுதல் வட்டி கேட்டு தலித் பெண்ணை நிர்வாணப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்து கொடூரம் செய்த தந்தை, மகன் மீது கடும் நடவடிக்கை எடுக்க அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் உள்ள குஷ்ருபூர் கிராமத்தை சேர்ந்த தலித் பெண்ணின் கணவர் அப்பகுதியை சேர்ந்த பிரமோத் சிங்கிடம் வாங்கிய ரூ.1500 கடனை வட்டியுடன் திரும்ப செலுத்தி உள்ளார். ஆனால் பிரமோத் சிங் மேலும் வட்டி கேட்டு தொந்தரவு செய்ததுடன் அவரது மனைவியை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்து செல்வதாக தொலைபேசியில் மிரட்டி உள்ளார்.
இதைத் தொடர்ந்து, அக்கம் பக்கத்தினரின் அறிவுரைப்படி அப்பெண் கடந்த சனிக்கிழமை போலீசில் புகார் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த பிரமோத் சிங், தனது அடியாட்களை அனுப்பி அன்றிரவே அப்பெண்ணை தனது வீட்டிற்கு தூக்கி சென்று நிர்வாணப்படுத்தி, சரமாரியாக தாக்கினார். பின்னர், தனது மகன் அன்ஷு சிங்கை அப்பெண்ணின் வாயில் சிறுநீர் கழிக்க சொல்லி, கட்டாயப்படுத்தி குடிக்க செய்தார். அங்கிருந்து ஒரு வழியாக தப்பி வந்த பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
பாட்னா முதுநிலை எஸ்பி ராஜிவ் மிஸ்ரா கூறுகையில், “தலைமறைவான தந்தை, மகன் மற்றும் அவர்களது அடியாட்களை தேட 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. அவர்கள் மீது ஏற்கனவே வழக்கு பதியப்பட்டு விசாரணை தொடங்கி உள்ளது,” என்று தெரிவித்தார். முதல்வர் நிதிஷ் குமார் செய்தியாளர்களை சந்தித்த போது, “குஷ்ருபூர் பகுதியில் பெண்ணை தாக்க இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன் ,” என்று தெரிவித்தார்.
The post கூடுதல் வட்டி கேட்டு மிரட்டி தலித் பெண்ணை நிர்வாணப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்து கொடூரம்: கடும் நடவடிக்கை எடுக்க நிதிஷ் உத்தரவு: தந்தை மகனை பிடிக்க 5 தனிப்படை appeared first on Dinakaran.