×

குன்றத்தூர் அருகே மாயமான சிறுவன் ஏரியில் பிணமாக மீட்பு: போலீஸ் விசாரணை

சென்னை: குன்றத்தூர் அருகே மாயமான சிறுவன் ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம், எம்.ஜி.ஆர்., தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் லோகேஷ் (வயது 17). ஐ.டி.ஐ படித்து முடித்துள்ளார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் தனது பாட்டி பத்மாவதியுடன் ஆடு மேய்க்க செம்பரம்பாக்கம் ஏரி பகுதிக்கு சென்றார். பின்னர் லோகேஷ் வீட்டுக்கு செல்வதாக பாட்டியிடம் கூறிவிட்டு சென்றார். இரவு பத்மாவதி வீட்டுக்கு சென்று பார்த்தபோது லோகேஷ் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து லோகேசை அவரது உறவினர்கள் தேடினர். லோகேஷை காணவில்லை என்று நேற்று முன்தினம் குன்றத்தூர் போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் நேற்று நந்தம்பாக்கம் அடுத்த கெலடிபேட்டை பகுதியில் செம்பரம்பாக்கம் ஏரியில் ஒரு சிறுவனின் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்ற போலீசார் சிறுவனின் உடலை மீட்டு சிறுவன் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுவன் மாயமான லோகேஷ் என்பதை உறுதி செய்தனர்.

லோகேஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. லோகேஷ் ஏரியில் குளிக்கும் போது தவறி விழுந்து ஏரியில் மூழ்கி இறந்தாரா அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

The post குன்றத்தூர் அருகே மாயமான சிறுவன் ஏரியில் பிணமாக மீட்பு: போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Siruvan lake ,Kunradur ,Chennai ,Kunradhur ,Kunrathur ,Dinakaran ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...