
சென்னை : உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு முத்தரசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தம் உடல் உறுப்புகளை ஈந்து பல மனித உயிர்களை காப்போரின் தியாகத்தினை போற்றிடும் வகையில் இறக்கும் முன் உறுப்பு கொடை வழங்குவோரின் இறுதி நிகழ்வுகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருப்பது நாட்டின் முன்னுதாரண முயற்சி என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வரவேற்கிறது.
உடல் உறுப்பு கொடையின் மூலம் பல நூறு பேருக்கு வாழ்வழிக்கும் அரும் பணியில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணியில் உள்ளது.மூளைச்சாவு அடைந்த துயரச் சூழலிலும் அவர்களின் உடல் உறுப்புகளை கொடையாக அளிக்க முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் மேற்கண்ட சாதனைகள் சாத்தியமாகிறது. உடல் உறுப்புதானம் என்பதின் அவசியம் மேன்மேலும் உணரப்பட மக்கள் நல்வாழ்வுத்துறை, மருத்துவத்துறை தமிழக அரசின் கீழ் எடுக்கும் முயற்சிகள் மேன்மேலும் தொடரட்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதை.. முதல்வரின் முன்னுதாரண முயற்சியை வரவேற்கிறோம் :முத்தரசன் appeared first on Dinakaran.