×

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை அக். 17ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!!

புதுடெல்லி: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை உச்ச நீதிமன்றம் அக். 17ம் தேதிக்கு ஒத்திவைத்தது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் ரூ.4,800 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறி, முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அளித்த புகார் மீது சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆரம்ப கட்ட விசாரணையில் முறைகேடு நடைபெற்றதற்கான முகாந்திரம் இல்லை என லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கை அளித்தும், இந்த முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தும்படி, 2018ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததுடன், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரித்து முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து மேற்கண்ட உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ‘‘இந்த விவகாரத்தில் கடந்த 2018ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில் குறை காண முடியாது. மேலும் ஆட்சி மாற்றம் காரணமாக மீண்டும் புதிதாக விசாரணை நடத்த தேவையில்லை என்றும், அதேப்போன்று சிறப்பு புலனாய்வு விசாரணை கோரிய ஆர்.எஸ்.பாரதி மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என கடந்த ஜூலை 18ம் தேதி உத்தரவிட்டார்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4.800கோடி டெண்டர் முறைகேடு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, மனு தொடர்பாக பழனிசாமி பதில் அளிக்க நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று வாதிட்டார். இதற்கு பழனிசாமி தரப்பில் ஆஜரான அரியமாசுந்தரம் ஆட்சேபம் தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், மனு மீதான விசாரணையை அக் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

The post எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை அக். 17ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!! appeared first on Dinakaran.

Tags : Edapadi Palanisami ,New Delhi ,Supreme Court ,Edapadi Palanisamy ,Dinakaran ,
× RELATED இபிஎஸ் இருக்கும் வரை அதிமுக ஒன்றிணைய வாய்ப்பில்லை: டிடிவி தினகரன் பேட்டி