×

மழையால் தண்ணீர் கொட்டுகிறது ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் திரண்ட சுற்றுலா பயணிகள்

*விடுமுறை நாளில் குடும்பத்துடன் குதூகலம்

திருப்பத்தூர் : திருப்பத்தூர் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் விடுமுறை தினமான நேற்று குடும்பத்துடன் திரண்ட சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

திருப்பத்தூர் அடுத்த ஏலகிரி மலை பின்புறம் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு லிங்க வடிவிலான சக்தி வாய்ந்த சுப்பிரமணிய சுவாமி சமேத வள்ளி தெய்வானை கோயில் பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. நீர்வீழ்ச்சிக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இயற்கை எழில் கொஞ்சும் அளவில் உள்ள இந்த சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.

இதில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் மற்றும் அண்டை மாநிலங்களான பெங்களூரு, கர்நாடகா, ஆந்திரா, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து குளித்துவிட்டு செல்வார்கள். கடந்த சில நாட்களாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் இல்லாமல் வறண்டு இருந்தது.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது. அதனால் விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் திரண்டு, மகிழ்ச்சியுடன் குளித்தனர். மேலும், நேற்று காலை திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. ஆங்காங்கே சாரல் மழை பெய்தது. இதனால் சுற்றுலா பணிகள் இந்த சூழலில் நீர்விழ்ச்சியில் நண்பர்கள், குடும்பத்துடன் குளித்து பொழுது போக்கியதோடு, செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

The post மழையால் தண்ணீர் கொட்டுகிறது ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் திரண்ட சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Jalakambarai ,Kuthugalam ,Tirupattur ,Dinakaran ,
× RELATED திருப்பத்தூரில் பெய்து வரும் மழையால்...