×

ஸ்ரீபெரும்புதூர் அருகே பரபரப்பு: வாலிபர்களை பீர் பாட்டிலால் தாக்கி 2 சவரன், பணம் பறித்த இருவர் கைது

 

ஸ்ரீபெரும்புதூர்,செப்.25: ஸ்ரீபெரும்புதூர் அருகே பைக்கில் சென்ற வாலிபர்களை பீர் பாட்டிலால் தாக்கி 2 சவரன் தங்க சங்கிலி, ரூ.10 ஆயிரம் பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். சோமங்கலம் அடுத்த நடுவீரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் நேதாஜி (23) மற்றும் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (27). இருவரும் நடுவீரப்பட்டு பகுதியில் செயல்படும் தனியார் பொறியியல் கல்லூரியில் கேண்டினில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேதாஜி, சுதாகர் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவு சோமங்கலம்-தாம்பரம் சாலையில் பைக்கில் தாம்பரம் நோக்கி சென்றுள்ளனர்.

அப்போது, வரதராஜபுரம் அருகே வந்து கொண்டிருந்தபோது பைக்கை வழிமறித்த இரண்டு மர்ம நபர்கள் நேதாஜி மற்றும் சுதாகர் ஆகிய இருவரிடமும் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அவர்கள் தர மறுக்கவே ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் பீர் பாட்டிலால் தாக்கி மிரட்டியதோடு, அவர்களிடமிருந்து இரண்டு பவுன் தங்கச் செயின், ரூ.10 ஆயிரம் பணத்தை கொள்ளையர்களின் கூகுள் பே எண்ணிற்கு பண பரிவர்த்தனை செய்து கொண்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பினர்.

இதுகுறித்து நேதாஜி, சுதாகர் ஆகிய இருவரும் சோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, செல்போன் எண்ணை வைத்து டிஜிட்டல் முறையில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட தாம்பரம் தர்காஸ் பகுதியைச் சேர்ந்த அருண் (23), வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த இளங்கோ (24) ஆகிய இரண்டு பேரையும் சோமங்கலம் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்க செயின், பைக் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

The post ஸ்ரீபெரும்புதூர் அருகே பரபரப்பு: வாலிபர்களை பீர் பாட்டிலால் தாக்கி 2 சவரன், பணம் பறித்த இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Sriperumbudur ,Sawarans ,Savaran ,Dinakaran ,
× RELATED கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில்...