×

திருமணத்திற்கு மகன் மறுப்பு மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை

அருப்புக்கோட்டை, செப். 24: அருப்புக்கோட்டை அருகே திருமணம் செய்து கொள்ள மகன் மறுப்பு தெரிவித்ததால், தாயார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அருப்புக்கோட்டை அருகே பொய்யாங்குளம் மேற்குத் தெருவை சேர்ந்தவர் அழகம்மாள் (75). இவரது மகன் ஆறுமுகம்(42). இவருக்கு வயதான நிலையிலும் திருமணம் செய்து கொள்ளாமல் சாமியாராக போகிறேன் என்றும், ஆன்மிக வாழ்வை தேடிப்போவதாகவும் சொல்லி திருமணம் செய்யாமல் காலம் கடத்தி வந்துள்ளார். இதனால் அழகம்மாள் தனது மகனை நினைத்து மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

தனது உறவினர்களிடம் நான் இறந்தபிறகு ஆதரவிற்கு யாரும் இல்லை என்றால் மகன் திருமணம் செய்து கொள்வான் என்று கூறி வந்துள்ளார்.இந்நிலையில், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அழகம்மாள் கடந்த 17ம் தேதி பூச்சிகொல்லி மருந்தை குடித்துள்ளார். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், பின்னர் உயர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அழகம்மாள் உயிரிழந்தார். இந்த தற்கொலை குறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post திருமணத்திற்கு மகன் மறுப்பு மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Aruppakottai ,Aruppukkottai ,
× RELATED பயிர்கள் நன்றாக வளர்ந்து அதிக மகசூல்...