×

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் போராட்டம் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை கைது: மண்டியாவில் முழு அடைப்பு

பெங்களூரு: தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோர் கைது செய்யப்பட்டனர். காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக விவசாய பாதுகாப்பு கமிட்டி நேற்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மண்டியா மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. இதனால் மாவட்டம் முழுவதும் ஸ்தம்பித்தது. ஆம்புலன்ஸ் சேவை தவிர மற்ற வாகனங்கள் இயங்கவில்லை. அரசு பஸ்கள் ஓடவில்லை.

விவசாயிகள் சாலையில் நடத்திய போராட்டத்தில் முன்னாள் முதல்வர் குமாரசாமி, சி.டி.ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். கன்னட அமைப்பினர் நேற்று மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினர். பெங்களூரு-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அத்திப்பள்ளி பகுதியில் இரு மாநில எல்லையை மூடிவிட்டு சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுத்து கொண்டு சாலை மறியல் போராட்டம் நடத்தி முழக்கம் எழுப்பினர். பெங்களூருவில் பாஜ சார்பில் நேற்று போராட்டம் நடந்தது. இதில் முன்னாள் முதல்வர்கள் பி.எஸ்.எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, முன்னாள் அமைச்சர் கோவிந்தகார்ஜோள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, பசவராஜ்பொம்மை உள்பட தலைவர்களை போலீசார் கைது செய்து விடுவித்தனர்.

*காவிரி விவகாரத்தில் செப்.26க்கு பிறகு முடிவு
காவிரி விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக கர்நாடகா அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் டி.கே.சிவகுமார், ’தமிழ்நாட்டிற்கு இப்போது 3000 கனஅடி நீர் தான் திறக்கப்பட்டு வருகிறது. வரும் 26ம் தேதி நடக்கும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் காவிரி தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்’ என்றார்.

The post காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் போராட்டம் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை கைது: மண்டியாவில் முழு அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Etuarapa ,Bassavaraj ,Karnataka ,Kaviri ,Mandya ,Bengaluru ,Former ,Chief Minister ,Eturapa ,Bhasavaraj ,Tamil Nadu ,Edurapa ,
× RELATED ஆட்சி செய்யாமல் காங்கிரஸ் வசூல் செய்கிறது : பிரதமர் மோடி