×

அரியலூர்-ஜெயங்கொண்டத்துக்கு கூடுதல் பஸ் இயக்க கோரி மாணவர்கள் மறியல்

 

அரியலூர், செப்.23: அரியலூரில் இருந்து ஜெயங்கொண்டத்துக்கு கூடுதல் பேருந்துகளை இயக்கக் கோரி கலெக்டர் அலுவலகம் முன் கல்லூரி மாணவர்கள் நேற்று சாலையில் அமர்ந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர். அரியலூர் அரசு கலைக்கல்லூரியில், செந்துறை, திருமானூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 2,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், கல்லூரியில் பயிலும் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த மாணவர்கள் கல்லூரி முடிந்து வீட்டுக்குச் செல்ல மதியம் 1 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை போதிய பேருந்துகள் இல்லாததால், 2 மணி நேரம் பேருந்துக்காக காத்திருக்க வேண்டி நிலை உள்ளது.

இதனால் நாள்தோறும் அவதிப்பட்டு வரும் மாணவ, மாணவிகள் அரியலூர் – ஜெயங்கொண்டத்துக்கு மதியம் நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் மாணவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனாலும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் நேற்று ஆட்சியர் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து வந்த கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

The post அரியலூர்-ஜெயங்கொண்டத்துக்கு கூடுதல் பஸ் இயக்க கோரி மாணவர்கள் மறியல் appeared first on Dinakaran.

Tags : Ariyalur-Jayangkond ,Ariyalur ,Jayangkonda ,
× RELATED ஜெயங்கொண்டத்தில் சாலையோர புளிய மரத்தில் திடீர் தீ