×

நீதிமன்றத்தில் ஆவணங்களை தாக்கல் செய்யாததால் நடிகர் விஷால் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

சென்னை: நடிகர் விஷால், பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி, வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிடுவதாக விஷால் நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார்.

தொகையை செலுத்தாவிட்டால் தனி நீதிபதி முன் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்கங்கள் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக்கூடாது என தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த வாரம் நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தபோது, நடிகர் விஷால், வங்கி கணக்குகளையும், சொத்து விவரங்களையும் தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விஷால் நேரில் ஆஜரானார். அப்போது, நீதிமன்றம் உத்தரவிட்டபடி ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. இதையடுத்து, விஷால் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை ஏன் எடுக்க கூடாது என்று விஷால் தரப்பிடம் நீதிபதி கேட்டார்.

அப்போது, விஷால் தரப்பு வழக்கறிஞர், வங்கியிலிருந்து ஆவணங்களை பெற தாமதம் ஆகிவிட்டது. ஆனால் ஆன்லைன் வாயிலாக தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதி, ஆன்லைனில் தாக்கல் செய்தது உறுதியாகாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார். இதையடுத்து, விஷால் தரப்பில் இரண்டு வங்கி கணக்குகளின் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. வீட்டின் கடன் தொடர்பான விவரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. 75 வயதான தந்தையின் கிரானைட் தொழில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தின் காரணமாக அவரது வீட்டுக்கடனையும் விஷால் செலுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பதிவேற்றம் செய்யப்பட்டதற்கான விவரங்களை தாக்கல் செய்ய 6 நாட்கள் அவகாசம் கேட்கப்பட்டது. மேலும் அடுத்த 28 நாட்களுக்கு படப்பிடிப்புகளில் கலந்துகொள்ள இருப்பதால், அடுத்த விசாரணையின்போது ஆஜராக விலக்கு அளிக்கவும் விஷால் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, வங்கிகளிலிருந்து கூடுதல் ஆவணங்களை பெறவும், நீதிமன்றம் கேட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்த விவரங்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கியும் விஷால் ஆஜராக விலக்கு அளித்து உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

The post நீதிமன்றத்தில் ஆவணங்களை தாக்கல் செய்யாததால் நடிகர் விஷால் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Vishal ,Supreme Court ,Chennai ,Anbuchezhian ,Gopuram Films ,Dinakaran ,
× RELATED நீட் வினாத்தாள் கசிவு: தேர்வை மீண்டும் நடத்தக்கோரி மனு