×

இந்தியாவுடன் மோதல் அதிகரித்துள்ள நிலையில் நாங்கள் பிரச்னையை தூண்டவில்லை: கனடா பிரதமர் திடீர் பேட்டி

ஒட்டவா: இந்தியாவுடன் மோதல் அதிகரித்துள்ள நிலையில், நாங்கள் பிரச்னையை தூண்டிவிட வில்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். கனடாவில் காலிஸ்தான் டைகர் படைப் பிரிவின் தலைவரும், தீவிரவாதியுமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் கனடாவில் உள்ள இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் டொரான்டோவில் உள்ள துணைத் தூதர் அபூர்வா வஸ்த்தவா ஆகியோர் முக்கிய பங்காற்றியுள்ளனர் என அவர்களின் போட்டோக்களுடன் கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டினர்.

இதன் தொடர்ச்சியாக, நாடாளுமன்றத்தில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ‘இந்திய அரசின் முகவர்களுக்கும் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைக்கும் தொடர்பு இருப்பதற்கான நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் உள்ளன’ என்று கூறினார். ஆனால், ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இந்த விவகாரத்தால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் ஏற்கனவே நடைமுறையில் இருந்த விஷயங்களில் நிறைய கட்டுப்பாடுகளையும், தடைகளையும் விதித்து வருகின்றன.

இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அளித்த பேட்டியில், ‘இந்தியா வளர்ந்து வரும் மிக முக்கியத்துவமான நாடு. நாங்கள் பிரச்னைகளைத் தூண்டி விடவோ அல்லது பிரச்னைகளை ஏற்படுத்தவோ விரும்பவில்லை. இருநாடுகளும் தொடர்ந்து இணைந்து பணியாற்ற வேண்டிய நாடுகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நிஜ்ஜார் கொல்லப்பட்ட விஷயத்தின் உண்மையை வெளியே கொண்டு வரவும், நீதியை நிலைநாட்டவும், எங்களுடன் இந்திய அரசு இணைந்து செயல்பட விரும்புகிறோம்’ என்று கூறியுள்ளார்.

The post இந்தியாவுடன் மோதல் அதிகரித்துள்ள நிலையில் நாங்கள் பிரச்னையை தூண்டவில்லை: கனடா பிரதமர் திடீர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : India ,Prime Minister of Canada ,OTTAVA ,Canada ,Justin Trudeau ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!