இளையான்குடி, செப். 22. இளையான்குடி பகுதியில் நேற்று பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து விவசாய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இளையான்குடி வட்டாரத்தில் சாலைக்கிராமம், சூராணம், நகரகுடி, முனைவென்றி, கண்டமங்கலம் ஆகிய பகுதிகளில் கடந்த இருபது நாட்களுக்கு முன்பு விதை நெல் விதைக்கப்பட்டது. விதைத்த நாள் முதல் மழை இல்லாததால் விதை நெல் முளைக்குமா என விவசாயிகள் கவலையுடன் இருந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மதியம் ஒரு மணியளவில் அப்பகுதியில் கருமேகங்கள் திரண்டு வந்தன. பின் அவை விவசாயிகளின் மனதில் பால் வார்க்கும் வகையில் மழைநீரை கொட்டித்தீர்த்தன. இதன்படி சுமார் ஒரு மணி நேரம் வரை பெய்த பலத்த மழையால், விவசாய நிலங்களில் உழுத சால்களில் தண்ணீர் தேங்கியது. அதனால் விதைத்த நெல் மற்றும் மிளகாய் விதைகள் முளைக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் இந்த மழை இளையான்குடி மற்றும் சாலைக்கிராமம் பகுதி விவசாயிகளை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
The post இளையான்குடி பகுதியில் கொட்டித்தீர்த்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.