
சென்னை: கைதியும், அவரது அடிப்படை உரிமைகளும் சிறைக் கதவுகளுக்கு முன் பிரிந்து விடுவதில்லை எனத் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆயுள் தண்டனை கைதிக்கு 40 நாட்கள் விடுப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. கொலை வழக்கில் செல்வம் என்பவருக்கு திருநெல்வேலி நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. பின்னர், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
கடந்த 1994ம் ஆண்டு முதல் தண்டனை அனுபவித்து வரும் அவர், தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், குழந்தைகளின் படிப்புக்கு ஏற்பாடு செய்யவும், வீட்டை பழுதுபார்க்கவும் 40 நாட்கள் விடுப்பு கோரி சிறைத்துறைக்கு விண்ணப்பித்தார். அதன் மீது எந்த முடிவும் எடுக்கப்படாததால் விடுப்பு வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறை நன்னடத்தை அதிகாரி, விடுப்பு வழங்கலாம் என்று அறிக்கை அளித்துள்ளார். மனுதாரரின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஏற்கனவே காவல் துறை பாதுகாப்புடன் 15 முறை உயர் நீதிமன்றம் விடுப்பு வழங்கியுள்ளது. சிறைக் கதவுகளின் முன் கைதியும், அவரது அடிப்படை உரிமைகளும் பிரிந்து விடுவதில்லை. எனவே, அவருக்கு 40 நாட்கள் பாதுகாப்புடன் விடுப்பு வழங்கப்படுகிறது. காவல் துறை பாதுகாப்புடன் வழங்கப்படும் விடுப்பு என்பது மனுதாரரை வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக கருதக் கூடாது என்று உத்தரவிட்டனர்.
The post கைதியும் அவரது அடிப்படை உரிமைகளும் சிறை கதவு முன் பிரிவதில்லை : பரோல் வழக்கில் ஐகோர்ட் கருத்து appeared first on Dinakaran.