×

அதிமுக பெயர், சின்னத்தை பயன்படுத்த தடை கோரி இபிஎஸ் வழக்கு ஓபிஎஸ் பதில் தர ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவது என்று செயல்பட்டு வருகிறார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரிமையியல் வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், பொது செயலாளர் என்று தன்னை தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது. நிலையில், தன்னை ஒருங்கிணைப்பாளர் என்று ஒ.பன்னீர்செல்வம் கூறிவருகிறார். இது தொண்டர்களிடையே குழப்பத்தை விளைவித்து வருகிறது. எனவே, அதிமுகவின் கட்சியின் பெயரையோ, இரட்டை இலை சின்னத்தையோ, கட்சியின் கொடியையோ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்த கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜராகி, உச்ச நீதிமன்றம் வரை நான்கு முறை வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் உள்பட நான்கு பேரை நீக்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கட்சி சின்னம், கொடியை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி வருகிறார். கட்சி உறுப்பினர் என அவர் கூறி வருவதுடன் கட்சி லெட்டர்பேடை சட்டவிரோதமாக பயன்படுத்தி, ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி அதிமுக நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்குவது உள்ளிட்ட கட்சி விரோத நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

எனவே, அவர் கட்சியின் கொடி, பெயர், சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். அப்போது, இந்த மனுவுக்கு பதிலளிக்க குறுகிய அவகாசம் வழங்க வேண்டும் என்று பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அர்விந்த் பாண்டியன் கோரினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்குமாறு ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 6ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post அதிமுக பெயர், சின்னத்தை பயன்படுத்த தடை கோரி இபிஎஸ் வழக்கு ஓபிஎஸ் பதில் தர ஐகோர்ட் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Bannerselvam ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…