×

10, 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெறுவதற்கு தொழிற்பயிற்சியில் தேர்ச்சி பெற்ற தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்துச்செல்லும் திறன் பெற்ற பயிற்சியாளர்கள் மேற்படிப்பினை தொடர 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இணையான சான்றிதழ் பெற நிலையான வழிகாட்டுதல்கள் (எஸ்ஓபி) www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது, அகில இந்திய தொழிற்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டநிலையில், தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறையின் கீழ் நடத்தப்பட்ட மொழித்தேர்வில், தனித்தேர்வர்களாக கலந்துகொண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 10 மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய கல்வி சான்றிதழ்களை இணைத்து, மாவட்டத்தில் உள்ள நொடல் தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தினை ஆய்வு செய்து தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககத்தில் இருந்து தகுதிக்கேற்ப 10 மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற்று இத்துறையால் வழங்கப்படும். விண்ணப்பம் மற்றும் உரிய கல்விச்சான்றிதழ்களுடன் காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 3.10.2023ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post 10, 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெறுவதற்கு தொழிற்பயிற்சியில் தேர்ச்சி பெற்ற தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Kanchipuram District ,Collector ,Kalichelvi Mohan ,Labour Welfare and Skill Development Department ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோடை...