
சென்னை: தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் செயலாட்சியர்களுக்கு பயிற்சி வகுப்பினை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று தொடங்கி வைத்தார். பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் செயலாட்சியர்களுக்கான பயிற்சி வகுப்பினை, சென்னை மாதவரம் பால்பண்ணையிலுள்ள ஆவின் திறன் மேம்பாட்டு மையத்தில் துவக்கி வைத்தார்.
இக்கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா, பால்வளத்துறை இயக்குநர் மற்றும் மேலாண்மை இயக்குநர் வினீத், பால்வளத்துறை கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர், துணை பால் ஆணையர் லட்சுமணக் குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். சென்னை, ஆவின் திறன் மேம்பாட்டு மையம், மாதவரம் பால் பண்ணையில் ஒரு நாள் பயிற்சி வகுப்பில் (திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், அரியலூர், திருவாரூர்), மாவட்டங்களைச் சார்ந்த சரக துணைப்பதிவாளர்கள் (பால்வளம்) மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களின் பொது மேலாளர்கள் மற்றும் தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் செயலாட்சியர்களாக பொறுப்பு வகிப்பவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பில் 62 பேர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த பயிற்சி வகுப்பில் தொடக்க பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் உறுப்பினர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்குதல், உறுப்பினர்களுக்கு உரிய பால் தொகை வழங்குதல், புதிய கறவை மாடுகள் வாங்க கடன் வழங்குதல், புதிய சங்கங்களை உருவாக்குதல், தொடக்க சங்கங்களை இலாபத்தில் செயல்படுத்துவதற்கான உத்திகள், செயலாட்சியரின் கடமைகள் மற்றும் பொறுப்புகள், சட்டப்பூர்வ விதிமுறைகள், பால் கூட்டுறவு தணிக்கை, வளங்களை முழுமையாக பயன்படுத்துதல், சமநிலைப்புள்ளியினை எட்டுதல், தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டது.
The post தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் செயலாட்சியர்களுக்கு பயிற்சி வகுப்பு: அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.